இந்தியா
ஒடிசா

மிரட்டும் ஜாவத் புயல்- 54 ஆயிரம் பேர் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றம்

Published On 2021-12-04 05:27 GMT   |   Update On 2021-12-04 07:35 GMT
ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மற்றும் விசாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினம்:

தெற்கு அந்தமான் அருகே உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு ஜாவத் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புயலின் தாக்கத்தால் வட கடலோர ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மற்றும் விசாகப்பட்டினம் மாவட்டங்களும், ஒடிசாவின் கஜபதி, கஞ்சம், பூரி, நாயகர், குர்தா, கட்டாக், ஜகத்சிங்பூர் மற்றும் கேந்திரபாரா மாவட்டங்களும் அதிகம் பாதிக்கப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது ஜாவத் புயல் விசாகப்பட்டினம் கடல்பகுதியில் 230 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது.  புயல் காரணமாக, வட கடலோர ஆந்திரா மற்றும் தெற்கு கடலோர ஒடிசாவில் மிக கனமழை பெய்யும் என்றும், மழையின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மற்றும் விசாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 54 ஆயிரம் பேர் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  11 கம்பெனி தேசிய பேரிடர் மீட்பு படையினர் 6 கம்பெனி கடலோர காவல்படையினர் உள்ளிட்டோர் புயலால் பாதிக்கப்படும் பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.



இதேபோல் ஒடிசாவின் கஜபதி, கஞ்சம், பூரி, ஜகத்சிங்பூர் மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட்  எச்சரிக்கை விடுக்கப்பட்டு மீட்பு படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News