இந்தியா
கொரோனா பூஸ்டர் டோஸ்

ஒமிக்ரான் வைரஸ் எதிரொலி: இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க சீரம் நிறுவனம் கோரிக்கை

Published On 2021-12-02 07:55 GMT   |   Update On 2021-12-02 07:55 GMT
ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால், பல நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ் போட்டவர்களுக்கு பூஸ்டர் ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.
கொரோனாவின் உருமாறிய வைரசான ஒமிக்ரான் தென் ஆப்பிரிக்காவில் தோன்றி, இப்போது உலக நாடுகளில் கால் தடம் பதிக்கத்தொடங்கி உள்ளது. இந்த வைரஸ் 50 உருமாற்றங்களை தன்னிடம் கொண்டிருப்பதால் மோசமான ஒன்று என்று விஞ்ஞானிகள் கவலை அடைந்துள்ளனர்.

இந்த ஒமிக்ரான் வைரஸ் சுமார் 27 நாடுகளில் 226 பேருக்கு உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. முழுமையாக 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களையும் ஒமிக்ரான் வைரஸ்  தாக்க வாய்ப்பு உள்ளதால், பல நாடுகளும் பூஸ்டர் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்து போடப்பட்டு வருகிறது.



ஆனால், இந்தியாவில் பூஸ்டர் டோஸ்க்கு அவசியம் இல்லை என்று கூறப்பட்டு வந்தது. தற்போது ஒமிக்ரான்  வைரஸ் பரவுவதால்  கேரளா, ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்களை அனுமதிப்பது குறித்து முடிவு செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், கொரோனாவின் 2 தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ்க்கு ஒப்புதல் அளிக்கும்படி இந்திய மருந்து கட்டுபாட்டு ஆணையத்திடம் சீரம் நிறுவனம் கோரிக்கை விண்ணப்பித்துள்ளது.

இதுகுறித்து சீரம் நிறுவனத்தின் அரசு மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்களின் இயக்குநர் பிரகாஷ் குமார் சிங் கூறியதாவது:-

உலகம் தொடர்ந்து தொற்றுநோயை எதிர்கொண்டு வருவதால், பல நாடுகள் கொரோனா தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸை போடத் தொடங்கியுள்ளன.

தற்போது நம் நாட்டில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை. மேலும் கொரோனா தொற்றுநோய் மற்றும் புதிய வகை தொற்றுகள் தோன்றுவதால், பூஸ்டர் டோஸின் தேவையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இந்த தொற்றுநோய் பரவல் சூழ்நிலையில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள பூஸ்டர் டோஸ் கொடுக்காமல் இருக்கக் கூடாது என்பது காலத்தின் தேவை. அது ஒவ்வொரு தனிநபரின் ஆரோக்கியத்திற்குமான உரிமையும் ஆகும்.

அதனால், 2 டோஸ் தடுப்பூசிகள் போட்டுக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் ஊசி செலுத்த ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. கொரோனா வைரஸ் தொற்று: மக்களவையில் இன்று விவாதம்
Tags:    

Similar News