இந்தியா
பிட்காயின்

மாயப் பணம் ‘பிட்காயின்’

Published On 2021-12-02 03:01 GMT   |   Update On 2021-12-02 03:01 GMT
‘பிட்காயினுக்கு’ இந்தியாவில் அங்கீகாரமில்லை என நம் நாட்டின் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உறுதியாகச் சொல்லிவிட்டார். இது நாட்டுக்கு மிகவும் நல்லது.
‘பிட்காயின்’ என்பது அச்சடித்த பணம் அல்ல. கண்ணுக்கு தெரியாத, இணைய வழி பண புழக்கத்துக்கான தொழில்நுட்ப வடிவம். இதை ரகசிய பணமாக இணைய வழியே பயன்படுத்துகிறார்கள்.

‘பிட்காயின்’ என்றால் என்ன என்று இப்படி விளக்கலாம்...

அதாவது, உங்களிடம் உள்ள பணத்தை பிட்காயின் போன்ற இணையதள பண பரிவர்த்தனை நிறுவனங்களிடம் முதலீடு செய்யலாம், அதற்கு அவர்கள் புள்ளிகளை (பாயிண்ட்ஸ்) தருவார்கள். அந்த புள்ளிகளை வைத்து, உலகில் எது எல்லாம் இணையம் வழி கிடைக்குமோ அவற்றையெல்லாம் அப்போதைய அப்புள்ளிகளின் மதிப்பின் அடிப்படையில் வாங்கலாம் அல்லது அந்த புள்ளிகளை நல்ல தொகைக்கு கைமாற்றியும் விடலாம்.

டிஜிட்டல் கரன்சி எனும் வகையில் வந்து இன்று உலகெல்லாம் அரசுகளை அச்சுறுத்தும் விஷயமாக இது உருவெடுத்துள்ளது.

கணக்கில் வராத கருப்பு பணத்தை இதில், எளிதில் (முதலீடு) முடக்கலாம். அசையா சொத்துகள் என்றால் அரசுவிடாது. தங்கம் என்றாலும் பூதம்போல் காக்க வேண்டும், பினாமிகளை நம்ப முடியாது, ஏமாற்றும் பினாமிகளை, கேஸ் போட்டோ, போடாமலோ எல்லோராலும் மிரட்ட முடியாது, எல்லா பினாமியும் தன் முதலாளிக்காக சாகக்கூடிய அளவு விசுவாசம் கொண்டவரும் அல்ல.

ஆக, பெரும் பணக்காரர்களுக்கும், சட்டவிரோத பண பரிவர்த்தனைக்கும் வரப்பிரசாதமாக கிடைத்திருப்பது இவ்வகை நிறுவனங்கள் வழங்கும் காயின்கள். இவற்றுள், பிட்காயின் என்பது ஒன்று. இன்று, இதுபோன்று ஏராளமான நிறுவனங்கள் இணையத்தில் சுற்றுகின்றன‌. இவற்றையெல்லாம் கண்காணிக்கவோ, கட்டுப்படுத்தவோ எந்த ஒரு அமைப்பும் இல்லை.

இருக்கும் பணத்தை குவிக்கலாம், அதுவாக வளரும். வெறுங்கையோடு உலகின் எந்த மூலைக்கும் செல்லலாம், சொத்து வாங்கலாம், உல்லாச வாழ்க்கை வாழலாம், கையில் எதுவும் எடுத்துச்செல்லும் அவசியமில்லை.

உங்களிடம் எவ்வளவு சொத்து இருக்கின்றது என யாருக்கும் தெரியவும் தெரியாது, பிட்காயின் நிறுவனங்களை தவிர‌.

பிட்காயின் வளர்ச்சியும் அபாரமானது, சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்தவர்கள் இன்று 300 கோடி ரூபாய் அளவு மதிப்புள்ள புள்ளிகளோடு சுற்றுகிறார்கள். அந்த அளவு வேகமான வளர்ச்சி. இந்த 300 சதவீத வளர்ச்சி எப்படி சாத்தியமாகிறது, என்ன மாதிரி பண சுழற்சி என்பதெல்லாம் யாருக்கும் தெரியாத சிதம்பர ரகசியமாகவே உள்ளது. வியாபாரம் மேற்கத்தியர் ரத்தத்தில் ஊறியது, அதில் விஞ்ஞானமும் கலந்துவிட்டால் என்னாகும்?

பேஸ்புக், டுவிட்டரை விட பெரும் சொத்துகளுடன் பிட்காயின் திகழ்கின்றது, ஸ்பெக்ட்ரம் பணத்தை கிட்டத்தட்ட சில பில்லியன் டாலர்களில் பெருக்கினால் ஓரளவு அதன் சொத்து மதிப்பை நெருங்க முடியும், அப்படி குவித்து வைத்திருக்கின்றது.



ஒரு பிட்காயினின் விலை, இன்றைய இந்திய ரூபாய் மதிப்பில், கிட்டத்தட்ட 43 லட்சம் ரூபாய். வாங்கி போட்டால் இன்னும் கொஞ்ச நாளில் 1 கோடி ரூபாய் வரை போகலாம்... யாருக்குத் தெரியும்?

ஆக, ஒரு காயினை 43 லட்சம் ரூபாய்க்கு வாங்கி, 1 கோடி ரூபாய்க்கு விற்றால் கூட 57 லட்சம் ரூபாய் லாபம். இந்த 57 லட்சம் ரூபாய் கரன்சி வியாபாரம் என்றால் அரசுக்கு வரி கிடைக்கும். டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனை என்றால் எப்படி வரி கிடைக்கும்?

ஒரு காயினுக்கே இப்படி என்றால் ஏராளமான காயின்கள் புழங்கினால் என்னாகும்? எவ்வளவு பெரிய பண புழக்க முடக்கம்? அரசுக்கு வரி இழப்பு?

இப்படி கருப்பு பணப் பதுக்கலின் சொர்க்கமாக இந்த நிறுவனங்கள் இருப்பதால் அரசுக்கு பெரும் சிக்கல்.

இந்தியா இதில் விழித்துகொண்டு, பிட்காயினில் முதலீடு செய்திருப்பவர்கள் என பலருக்கு 2017-ல் சம்மன் அனுப்பியது. அதன் பின் நிலைமை சரியானாலும், அண்மைக் காலமாக இதன் பரவல் அதிகமாகி உள்ளது. குறிப்பாக, நம்நாட்டில் பல மாநிலங்களில் காயின்களில் முதலீடு செய்வது குறித்து அறிவிப்புகள் வந்தன.

ஆக, பிட்காயின் என்பது, யாரோ ஒருவரின் நலனுக்காக உருவாக்கப்பட்ட ஒன்று. இதில் அரசாங்க மற்றும் வங்கி பரிவர்த்தனைகள் கிடையாது. ஒருமாதிரி தனியார் பங்குச்சந்தை போன்றதுதான், இதை வளரவிட்டால் அரசுகள் தள்ளாடும்.

மிகவும் முக்கியமாக, இது பாதுகாப்பானதும் இல்லை. பொதுவாக, வங்கிகளில் செய்யப்படும் பண முதலீடுகளுக்கு, அரசின் பாதுகாப்பு, வாடிக்கையாளர் பணத்துக்கு ஈடான சொத்துகள், தங்கம் போன்ற பாதுகாப்புகள் உண்டு. ஆனால், பிட்காயின் போன்ற இணையதள நிறுவன காயின்களுக்கு, எந்த விதமான பிணையும் கிடையாது. திடீரென அது குப்புற விழுந்தால், அவ்வளவுதான்! செய்த முதலீடு அனைத்தும் காலி.

வெளிநாடுகளில் இருந்து கோடி கோடியாக தொண்டு நிறுவனங்களுக்கு வந்து கொண்டு இருந்த பணத்துக்கு தடை, ஹவாலாவில் கிடுக்கிப்பிடி போன்ற நிலை ஏற்பட்ட பின்பு, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் பலருக்கு, பிட்காயின் போன்ற இணைய கரன்சிகள், எளிதான தேர்வாக உள்ளது.

தற்போது, மத்திய அரசு இவற்றின் மீதான கண்காணிப்பில் இறங்கி இருப்பது நல்ல விஷயம். ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட பல மேலை நாடுகள் இது போன்ற நிறுவனங்கள் மீதும், இந்த கரன்சிகள் குறித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது கேள்விக்குறியாக உள்ளது.

எது எப்படியோ, இந்திய அரசு, விழித்துக்கொண்டு பிட்காயினுக்கான தடை தொடரும் என்றும், இதை அனுமதிக்க முடியாது என்றும் சொல்லிவிட்டது.

இந்த அறிவிப்பு மட்டும் வராமல், இதற்கு அனுமதி வழங்கியிருந்தால், நம் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் என்பதுடன், கருப்பு பணத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக,
மத்திய அரசு
, கடந்த 7 ஆண்டுகளாக எடுத்த அனைத்து முயற்சிகளும் வீணாகிப் போயிருக்கும்.

நம் அரசியல்வாதிகளுக்கும், தேர்தலின்போது, ‘வீட்டுக்கொரு பிட்காயின்’ என்று அறிவித்து, தேர்தல் ஆணையத்தின் கண்ணில் மண்ணை இறைத்து, கருப்பை, சுலபமாக வெள்ளையாக்க வழிவகுத்திருக்கும்.



Tags:    

Similar News