செய்திகள்
ராகுல் காந்தி

மிகவும் ஆபத்தானது உருமாறிய கொரோனா வைரஸ் - ராகுல் காந்தி எச்சரிக்கை

Published On 2021-11-27 18:05 GMT   |   Update On 2021-11-27 18:05 GMT
வெளிநாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
புதுடெல்லி:

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள உருமாற்றம் அடைந்த புதிய வைரசுக்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் இந்த வைரஸ் கால் பதித்துள்ளது. 

ஒமிக்ரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து, அரசின் முக்கிய அதிகாரிகளுடன் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய வீரியமிக்க கொரோனா இந்தியாவுக்குள் பரவாமல் தடுப்பது பற்றி இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது

அடுத்த மாதம் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்க மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ள சூழலில், புதிய வகை கொரோனா மிரட்டுவதால் சர்வதேச விமான போக்குவரத்துக்கு சேவையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தியதை ஆய்வுசெய்ய வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், தடுப்பூசி செலுத்துவதில் இந்திய அரசு கூடுதல் விழிப்புடன் செயல்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், புதிய வகை கொரோனா மிகவும் அச்சுறுத்தலானது. நாட்டு மக்களுக்கு தடுப்பூசி பாதுகாப்பை அளிப்பதில் இந்திய அரசாங்கம் தீவிரமாக இருக்கவேண்டும். குறைந்தளவில் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கையை வெளியிடுவதில் எவ்வித ஒளிவுமறைவும் இருக்கக்கூடாது என பதிவிட்டுள்ளார். 

Tags:    

Similar News