செய்திகள்
அன்சி கபீர் - அஞ்சனா

கேரள அழகிகளை சொகுசு காரில் துரத்தி சென்ற டிரைவர் கைது

Published On 2021-11-27 09:01 GMT   |   Update On 2021-11-27 09:01 GMT
விபத்தில் மர்மமாக இறந்த கேரள அழகிகளை சொகுசு காரில் துரத்தி சென்ற டிரைவரை கைது செய்த போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்தவர் மாடல் அழகி அன்சி கபீர் (வயது 23).இவரும் இவரது தோழியும் மாடல் அழகியான ஆயுர்வேத டாக்டர் அன்ஜனா சாஜன் (26) ஆகியோர் மேலும் 2 பேருடன் கடந்த 1-ந்தேதி நள்ளிரவில் கொச்சி அருகே காரில் சென்றனர்.

அப்போது மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென குறுக்கே புகுந்ததால் ஏற்பட்ட விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் ஒருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பலியானார்.

இந்த விபத்து குறித்து கொச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.போலீஸ் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. விபத்து நடந்த பகுதியில் உள்ள ஓட்டலில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை அழித்ததாக தனியார் ஓட்டல் அதிபர் மற்றும் ஊழியர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் விபத்து நடந்த நேரத்தில் மாடல் அழகிகளின் காரை பின்தொடர்ந்து சொகுசு காரில் துரத்தி சென்றதாக டிரைவர் சாஜித் என்பவரை நேற்று போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இவர் கடந்த சில நாட்களாக போலீஸ் விசாரணைக்கு பயந்து தலைமறைவாக இருந்தார்.

நேற்று கொச்சி குற்றப்பிரிவு போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜர் ஆகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து நேற்று அவர் போலீசார் முன்பு ஆஜர் ஆனார். அவரிடம் தீவிர விசாரணை நடத்திய போலீசார் உள்நோக்கத்துடன் அழகிகளின் காரை துரத்திச் சென்றதாக வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் அவரை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், இந்த வழக்கு விசாரணை இறுதி கட்டத்தில் உள்ளது.இதில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடந்து வருகிறது என்று கூறினர்.

Tags:    

Similar News