செய்திகள்
டெல்லி சட்டசபையில் இருந்து 2 பாஜக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்
டெல்லி சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏ ஜிதேந்தர் மகாஜன் கூட்டத்தொடர் முழுவதும் நீக்கப்பட்டார்.
புதுடெல்லி:
டெல்லி சட்டசபையின் சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. காலையில் சபை கூடியபோது, பாஜக எம்பிக்கள் எழுந்து, அரசின் புதிய மதுபானக் கொள்கை, காற்று மாசு, வாட் வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச வேண்டும் என முழக்கமிட்டனர்.
ஆனால், இந்த ஒருநாள் அமர்வில் பட்டியலிடப்பட்ட விவகாரங்கள் தவிர மற்ற விஷயங்கள் குறித்து எந்த விவாதமும் நடத்தப்படாது என சபாநாயகர் திட்டவட்டமாக கூறினார். இதையடுத்து பாஜக எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதனால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது. சபாநாயகர் எச்சரித்தும் கேட்கவில்லை. இதையடுத்து எம்எல்ஏக்கள் மோகன் சிங் பிஷ்த், அனில் பாஜ்பாய் ஆகியோரை சபையில் இருந்து வெளியேற்றும்படி சபைக் காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். அவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
அதன்பின்னர் பாஜக எம்எல்ஏ ஜிதேந்தர் மகாஜனை கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்வதற்காக போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, கூட்டத்தொடர் முழுவதும் மகாஜன் நீக்கப்பட்டார். இந்த நடவடிக்கையை கண்டித்து மற்ற பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
காற்று மாசு, மதுபானக் கொள்கை, உள்ளூர் விவசாயிகளின் நிலை குறித்து தொடர்பான விவாதங்களில் இருந்து ஆளும் ஆம் ஆத்மி கட்சி ஒதுங்குவதாக பாஜக குற்றம் சாட்டி உள்ளது.