செய்திகள்
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தது சத்தீஸ்கர் அரசு: ரூ.1000 கோடி இழப்பு ஏற்படும் என்கிறது
மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்துள்ள நிலையில், இன்று சத்தீஸ்கர் மாநில அரசு வாட் வரியை குறைத்துள்ளது.
மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை தீபாவளிக்கு முந்தைய தினம் அதிரடியாக குறைத்தது. டீசல் மீதான வரியில் லிட்டருக்கு 10 ரூபாயும், பெட்ரோல் மீதான வரியில் லிட்டருக்கு 5 ரூபாயும் குறைத்தது. மக்கள் முழுமையான பலனை பெற, மாநில அரசுகளும் வாட் வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டது.
மத்திய அரசை தொடர்ந்து, பா.ஜனதா ஆட்சியில் இருக்கும் மாநில அரசுகள் வாட் வரியை குறைத்தன. காங்கிரஸ் ஆட்சி செய்யும் சில மாநில அரசுகளும் குறைத்தன. சுமார் 25 மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் வரியை குறைத்துள்ளன.
ஆனால் தமிழகம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள் வாட் வரியை குறைக்காமல் இருந்தன. இந்த நிலையில் சத்தீஸ்கர் அரசு இன்று டீசல் மீதான வாட் வரியை 2 சதவீதமும், பெட்ரோல் மீதான வாட் வரியை 1 சதவீத அளவிலும் குறைத்துள்ளது. இதனால் 1000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.