செய்திகள்
ஜே.பி.நட்டா தலைமையில் பாஜக தேசிய செயற்குழு இன்று கூடுகிறது
சமீபத்தில் நடந்த 29 எம்.எல்.ஏ. தொகுதிகள், 3 எம்.பி. தொகுதிகளில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆய்வு செய்ய பா.ஜ.க. தேசிய செயற்குழு இன்று கூடுகிறது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் இன்று காலை பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில் டெல்லியில் இருக்கும் பா.ஜ.க. நிர்வாகிகள், மத்திய மந்திரிகள் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் மட்டும் நேரடியாக வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
டெல்லிக்கு வெளியே இருக்கும் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் காணொளி வாயிலாக பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆய்வு செய்யவும், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கவும் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 5 மாநில சட்டசபை தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது.
இதையும் படியுங்கள்...பணமோசடி வழக்கு- அனில் தேஷ்முக்கை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவு