செய்திகள்
பைசாபாத் ரெயில் நிலையத்தின் பெயர் ‘அயோத்தி கன்ட்’ என மாறியது
பைசாபாத் நகரின் பெயர் ஏற்கனவே அயோத்தி என மாற்றப்பட்ட நிலையில், தற்போது ரெயில் நிலையத்தின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநில அரசு கடந்த மாதம், பைசாபாத் சந்திப்பு ரெயில் நிலையத்தின் பெயரை ‘அயோத்தி கன்ட்’ என மாற்ற முடிவு செய்தது. மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் பெயர் மாற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பைசாபாத் ரெயில் நிலையம் ‘அயோத்தி கன்ட்’ என அழைக்கப்படும் என்று வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. மேலும், இந்த பெயர் மாற்றம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜனதா அரசு ஏற்கனவே, அலகாபாத் பெயரை பிரயக்ராஜ் எனவும், முகல்சாராய் ரெயில்வே சந்திப்பை பண்டிட் தீன் தயாள் உபத்யாய் சந்திப்பு எனவும் மாற்றியது குறிப்பிடத்தக்கது.
பைசாபாத் ரெயில் நிலையம் 1874-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.