செய்திகள்
பிரியங்கா காந்தி

யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி குரு கோரக்நாத்தின் போதனைகளுக்கு எதிரான ஆட்சி -பிரியங்கா காந்தி தாக்கு

Published On 2021-10-31 11:21 GMT   |   Update On 2021-10-31 11:21 GMT
முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கோட்டையாக கருதப்படும் கோரக்பூரில் நடைபெற்ற பிரதிக்யா யாத்திரையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உரையாற்றினார்.
கோரக்பூர்:

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளது. மக்களின் ஆதரவை திரட்டுவதற்காகவும் கட்சியை வலுப்படுத்துவதற்காகவும் பிரதிக்யா யாத்திரை நடத்துகிறது. இந்த யாத்திரையின்போது, பாஜக ஆட்சி மீதான விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளும் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கோட்டையாக கருதப்படும் கோரக்பூரில் நடைபெற்ற பிரதிக்யா யாத்திரையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் 
பிரியங்கா காந்தி
 பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

பாஜக ஆட்சியில் தலித்துகள், நெசவாளர்கள், ஓபிசி மக்கள், ஏழைகள், சிறுபான்மையினர் மற்றும் பிராமணர்கள் மோசமாக நடத்தப்பட்டனர். குரு கோரக்நாத்தின் போதனைகளுக்கு எதிராக யோகி ஆதித்யநாத் ஆட்சி நடத்துகிறார். இந்த அரசு நாள்தோறும் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.



லக்கிம்பூர் கேரியில் நடந்த விவசாயிகள் படுகொலை, விவசாயிகளின் துயரங்களை காதுகொடுத்து யாரும் கேட்காதது ஆகியவை  இந்த அரசாங்கத்தின் உண்மையான முகத்தை காட்டுகிறது. நாட்டில் விவசாயிகள் படும் துயரங்களைக் கேட்க யாரும் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரியங்கா காந்தி தனது தேர்தல் பிரசாரத்தை, பிரதமர் மோடியின் பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் இருந்து கடந்த 10ம் தேதி தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News