செய்திகள்
அஞ்சால்வேலியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சேதமான வீடுகள்.

கேரளாவில் கனமழை நீடிப்பு: எருமேலியில் அடுத்தடுத்து நிலச்சரிவு- 10 வீடுகள் சேதம்

Published On 2021-10-29 05:34 GMT   |   Update On 2021-10-29 05:34 GMT
திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி ஆகிய 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்:

அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக கேரளா முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.

தொடர் மழை காரணமாக கேரளாவின் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. மேலும் மாநிலத்தின் பிரதான அணைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருவதால் அணைகளுக்கு வரும் உபரி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

இதனால் ஆறுகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணை நீருடன், மழை வெள்ளமும் சேர்ந்து கொள்ள தாழ்வான பகுதிகள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன.

கேரளாவில் கடந்த வாரம் பெய்த பலத்த மழை காரணமாக மலையோர கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

மண்ணில் புதைந்தவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் ராணுவத்தினர் மீட்டனர். வெள்ளத்தில் சிக்கியவர்களும் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கோட்டயம் மாவட்டம் எருமேலி பகுதியில் நேற்று கன மழை பெய்தது. இதில் அஞ்சால் வேலி பகுதியில் பலத்த நிலச்சரிவு ஏற்பட்டது.

இதுபோல பள்ளிபாடி, வாழையத்துபட்டி பகுதிகளிலும் அடுத்தடுத்து நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் இருந்த 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக வீடுகளில் இருந்தவர்கள் நிவாரண முகாம்களுக்கு சென்றுவிட்டதால் உயிர்பலி ஏற்படவில்லை.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதன்காரணமாக அந்த பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள் போன்ற வாகனங்களை வெள்ளம் அடித்து சென்றது.ஒரு சில வீடுகளில் இருந்த கால்நடைகளையும் வெள்ளம் இழுத்து சென்றது.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு படையினர் முகாமிட்டு நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அங்கு வருவாய் துறையினரும் முகாமிட்டுள்ளனர்.



இதற்கிடையே கேரளாவில் இன்றும் பல இடங்களில் கனமழை பெய்தபடி இருந்தது. இதுபற்றி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் 31-ந் தேதி வரை மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று எச்சரித்து உள்ளது.

இதன் காரணமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி ஆகிய 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே இடுக்கி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணைக்கு வரும் உபரி நீரை திறந்து விட பொதுப்பணி துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

இதுதொடர்பாக இடுக்கி அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. கடந்த வாரமும் இடுக்கி அணையில் இருந்து வெள்ளம் திறந்து விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



Tags:    

Similar News