செய்திகள்
இந்தியாவில் கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8 மாதங்களில் இல்லாத அளவு குறைவு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 13,451 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,451 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 42 லட்சத்து 15 ஆயிரத்து 653 ஆக உயர்ந்தது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 7,163, மராட்டியத்தில் 1,201, தமிழ்நாட்டில் 1,090 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கேரளாவில் விடுபட்ட மரணங்கள் உள்பட 482 பேர் இறந்துள்ளனர். இதுதவிர மராட்டியத்தில் 32 பேர், தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் தலா 15 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 585 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 4,55,653 ஆக உயர்ந்தது. இதில் அதிகபட்சமாக மராட்டியத் தில் 1,40,060 பேர் அடங்குவர்.
புதிய பாதிப்பைவிட நோயின் பிடியில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை நேற்று அதிகமாக இருந்தது. அந்த வகையில் மேலும் நேற்று 14,021 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 35 லட்சத்து 97 ஆயிரத்து 339 ஆக உயர்ந்தது. தற்போது 1,62,661 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த 242 நாட்களில் இல்லாத அளவு குறைவு ஆகும்.
நாடு முழுவதும் நேற்று 55,89,124 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 103 கோடியே 53 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, இதுவரை 60 கோடியே 32 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 13,05,962 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.