3 ஆண்டுகளுக்கு பிறகு வீடு திரும்பிய லல்லுபிரசாத்துடன் மூத்த மகன் சண்டை - வீட்டு முன் அமர்ந்து தர்ணா போராட்டம்
பாட்னா:
பீகாரில் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக இருந்து அரசியலில் முக்கிய பங்கு வகித்த லல்லுபிரசாத் யாதவ் மாட்டுத்தீவண ஊழலில் சிக்கி சிறை சென்றார்.
இதன் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். விடுதலைக்குப் பிறகு டெல்லியில் உள்ள மகன் வீட்டில் தங்கியிருந்தார்.
3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நேற்று மாலை அவர் டெல்லியில் இருந்து பாட்னாவுக்கு விமானத்தில் வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு ராஷ்டீரிய ஜனதா தளம் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர் அவர் வீட்டுக்கு சென்றார். அப்போது அவரது மூத்த மகன் தேஜ் பிரதாப் சிங் கடும் சண்டையில் ஈடுபட்டார். கட்சியில் தனக்கு மதிப்பில்லை என்று கூறி அவர் வீடு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
லல்லுபிரசாத் யாதவ் உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியை கைப்பற்ற அவரது மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் யாதவ் ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் தேஜ்பிரதாப் யாதவ் தனக்கு உரிய அதிகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் உள்ளார்.
லல்லுபிரசாத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அவர் விரைவில் புதிய முடிவு எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார். இதனால் 3 ஆண்டுகளுக்கு பிறகு வீடு திரும்பியிருக்கும் லல்லுபிரசாத் யாதவ் மிகவும் கவலை அடைந்துள்ளார்.
பீகாரில் வருகிற 30-ந் தேதி சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பதில் லல்லுபிரசாத் யாதவ் தீவிரமாக உள்ளார்.
இதற்காக அவர் விரைவில் 3 தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று தெரிகிறது. இந்த நிலையில் அவரது மகன் தகராறில் ஈடுபடுவது கட்சி மூத்த தலைவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படியுங்கள்...ஆர்யன்கான் போதைப்பொருள் வழக்கு - நடிகை அனன்யாவிடம் மீண்டும் விசாரணை