செய்திகள்
பிரதமர் மோடி

பண்டிகையின்போது மக்கள் அனைவரும் உள்ளூர் பொருட்களை வாங்க வேண்டும்- பிரதமர் மோடி பேச்சு

Published On 2021-10-24 07:19 GMT   |   Update On 2021-10-24 07:19 GMT
சர்தார் வல்லபாய் படேலின் வாழ்க்கையில் இருந்தும், எண்ணங்களில் இருந்தும் நாம் நிறைய கற்றுக் கொள்ளலாம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ரேடியோவில் ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) என்ற பெயரில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

அவர் 82-வது முறையாக இன்று ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது:-

தடுப்பூசி போடுவதில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. 100 கோடி தடுப்பூசி டோசை கடந்த பிறகு நாடு புதிய ஆற்றல் மற்றும் உற்சாகத்துடனும் முன்னேறுகிறது. தடுப்பூசி திட்டத்தில் இந்தியா அடைந்த வெற்றி நாட்டின் வல்லமையை பறைசாட்டுகிறது.

தடுப்பூசி மைல் கல்லால் நாடு பெருமை அடைகிறது. இதற்காக சுகாதார பணியாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களது உழைப்பால் தான் இதை சாதிக்க முடிந்தது. தடுப்பூசி இயக்கத்தின் வெற்றி இந்தியாவின் திறனையும், கூட்டு முயற்சி மந்திரத்தின் வலிமையையும் காட்டுகிறது.



நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு நமது சுகாதார பணியாளர்கள் இரவும், பகலும் பாடுபட்டு வருகிறார்கள். அவர்கள் தங்களது உறுதியால் மனித குலத்திற்கு சேவை செய்வதற்கான ஒரு புதிய அளவுகோளை அமைத்தனர்.

உத்தரகாண்ட் மாநிலம் முதல் டோசில் 100 சதவீதத்தை நிறைவு செய்துள்ளது. இதற்காக அம்மாநில அரசாங்கம் பாராட்டப்பட வேண்டும். ஏனென்றால் அது மிகவும் கடினமான பகுதி.

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளான அக்டோபர் 31 தேசிய ஒற்றுமை தினமாக கடை பிடிக்கப்படுகிறது. ஒவ்வொருவரின் சார்பாக நான் இரும்பு மனிதனுக்கு தலை வணங்குகிறேன். ஒற்றுமையின் செய்தியை கூறும் சில செயல்களில் நான் இணைந்துகொள்ள வேண்டியது அனைவரின் பொறுப்பு ஆகும்.

தேசிய ஒருமைப்பாடு இருந்தால் நாட்டில் வளர்ச்சி ஏற்படும். சர்தார் வல்லபாய் படேலின் வாழ்க்கையில் இருந்தும், எண்ணங்களில் இருந்தும் நாம் நிறைய கற்றுக் கொள்ளலாம்.

பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் மக்கள் அனைவரும் உள்ளூர் பொருட்களை வாங்க வேண்டும். உள்ளூர் பொருட்களை வாங்கினால் ஏழை வியாபாரிகளின் வீட்டில் பிரகாசம் ஏற்படும்.

உலக அமைதிக்காக இந்தியா எப்போதுமே உழைத்து வருகிறது. ஐ.நா.வின் அமைதி காக்கும் படையில் நாட்டின் பங்களிப்பு இருக்கிறது. யோகா மற்றும் பாரம்பரிய ஆரோக்கிய முறைகளை மேலும் பிரபலப்படுத்த சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்.

பெண் போலீசாரின் எண்ணிக்கை உயர்ந்து வருவது பாராட்டுக்குரியது. 2014-ல் 1.05 லட்சமாக இருந்தது தற்போது 2.01 லட்சமாக உயர்ந்துள்ளது. பெண் பாதுகாப்பு பணியாளர்கள் இருப்பது இயற்கையாகவே மக்களிடையே குறிப்பாக பெண்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

பெண் போலீசார் நாட்டின் மேலும் பல மகள்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார்கள். எதிர்காலத்தில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் போலீஸ் சேவையில் இணைவார்கள் என்று நான் நம்புகிறேன்.

நாட்டில் கிராமங்களின் நிலப்பரப்பை டிஜிட்டல் முறையில் பதிவு செய்யும் பணிகளில் டிரோன்கள் பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஆகஸ்டு 25 அன்று நாடு புதிய டிரோன் கொள்கையை கொண்டு வந்தது. டிரோன் தொடர்பான தற்போதைய மற்றும் எதிர்கால வாய்ப்புகளின் அடிப்படையில் இந்த கொள்கை உருவாக்கப்பட்டது.

டிரோன் தொழில்நுட்பத்தில் முன்னணி நாடாக இருக்க விரும்புகிறோம். இதற்காக அரசு அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

தூய்மை எங்கு இருக்கிறதோ அங்கு ஆரோக்கியம் இருக்கிறது. ஆரோக்கியம் இருக்கும் இடத்தில் வலிமை இருக்கும். மேலும் எங்கு சக்தி இருக்கிறதோ அங்கு செழிப்பு இருக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


Tags:    

Similar News