செய்திகள்
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் நான்காவது வாரத்தில் தொடங்க வாய்ப்பு
மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் ஒரே நேரத்தில் செயல்பட்டாலும் உறுப்பினர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் இருக்கைகள் அமைக்கப்படும்.
புதுடெல்லி:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 4வது வாரத்தில் தொடங்கி ஒரு மாதம் வரை நடைபெறலாம் என தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கூட்டத்தொடர் நடத்தப்படும். சுமார் 20 அமர்வுகளைக் கொண்ட இந்த கூட்டத்தொடர், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக கடந்த ஆண்டு பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படவில்லை. பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் மழைக்கால கூட்டத்தொடரின் நாட்கள் குறைக்கப்பட்டன.
குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பான அதிகாரப்பூர்வ முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. எனினும், நவம்பர் 29 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23 ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் ஒரே நேரத்தில் செயல்பட்டாலும் உறுப்பினர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் இருக்கைகள் அமைக்கப்படும்.
முதல் சில அமர்வுகளில், பாராளுமன்ற வளாகத்திற்குள் பலர் கூடுவதை தவிர்க்கும் வகையில், இரு அவைகளும் தனித்தனி நேரத்தில் நடத்தப்பட்டன.
குளிர்கால கூட்டத்தொடரின்போது, பாராளுமன்ற வளாகம் மற்றும் பாராளுமன்ற பிரதான கட்டிடத்திற்குள் நுழைபவர்கள் முககவசம் அணிந்திருக்க வேண்டும், கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியிருக்கும்.
2024 பொதுத் தேர்தலுக்கான அரையிறுதியாகக் கருதப்படும் ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு நடைபெற உள்ள குளிர்கால கூட்டத்தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதையும் படியுங்கள்... நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல - தேசிய தடுப்பூசி ஆய்வுக் குழு