செய்திகள்
லக்கிம்பூர் வன்முறை

இது முடிவற்ற கதையாக இருக்கக்கூடாது- உ.பி. அரசு மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி

Published On 2021-10-20 11:28 GMT   |   Update On 2021-10-20 11:28 GMT
விவசாயிகள் கொலை தொடர்பான வழக்கில், அனைத்து சாட்சிகளின் வாக்குமூலங்களையும் அரசு பதிவு செய்து பாதுகாக்க வேண்டும் என தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர்  கேரியில் காரைவிட்டு மோதி விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை உத்தர பிரதேச அரசு சரியாக கையாளவில்லை என உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்திருந்தது.

இந்நிலையில், லக்கிம்பூர் கேரி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்பில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பாக உத்த பிரதேச அரசுக்கு நீதிமன்றம் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியது.



மேலும், வழக்கு விசாரணை தொடர்பாக உத்தர பிரதேச அரசு தாக்கல் செய்த அறிக்கை தொடர்பாகவும் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

அறிக்கையை கடைசி நிமிடத்தில் தாக்கல் செய்தால் அதை நாங்கள் எப்படி படித்து பார்க்க முடியும்? குறைந்தபட்சம் ஒரு நாளுக்கு முன் தாக்கல் செய்யுங்கள். இந்த வழக்கில் மொத்தம் உள்ள 44 சாட்சிகளில் 4 சாட்சிகளிடம் மட்டுமே வாக்குமூலம் பதிவு செய்திருக்கிறீர்கள். மற்றவர்களிடம் ஏன் வாக்குமூலம் பெறவில்லை? என தலைமை நீதிபதி என்.வி.ரமணா கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த உ.பி. அரசு தரப்பு வழக்கறிஞர், வாக்குமூலம் பெறுவதற்கான நடவடிக்கை தொடர்ந்து நடைபெறுகிறது. முக்கிய குற்றவாளிகள் அனைவரும் கைது  செய்யப்பட்டுவிட்டனர் என்றார்.

எத்தனை பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என கேட்டதற்கு, ‘இரண்டு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்று விவசாயிகளை கொன்றதற்காகவும், மற்றொன்று விவசாயிகள் மீது மோதிய காருடன் தொடர்புடையவர்களை கொன்றதற்காகவும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல் வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்’ என வழக்கறிஞர்  கூறினார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, இவ்வழக்கின் அனைத்து சாட்சிகளின் வாக்குமூலங்களையும் அரசு பதிவு செய்து பாதுகாக்க வேண்டும் என உத்தரவிட்டார். 

‘காவல்துறை அவர்களிடம் கேள்வி கேட்டு வாக்குமூலம் பெறாத வரை, நாங்கள் இந்த விவகாரத்தில் மேலும் எதுவும் பெற முடியாது. இது ஒரு முடிவற்ற கதையாக இருந்துவிடக்கூடாது’ என்றும் தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.
Tags:    

Similar News