செய்திகள்
வெள்ளத்தை பார்வையிடும் முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி

உத்தரகாண்ட் கனமழை - வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார் முதல் மந்திரி புஷ்கர் சிங்

Published On 2021-10-19 12:12 GMT   |   Update On 2021-10-19 12:12 GMT
உத்தரகாண்டில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து முதல் மந்திரியிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.
டேராடூன்:

வட மாநிலங்களில் ஒன்றான உத்தரகாண்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழையால் அணைகளின் நீர்வரத்து அதிகரித்து ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 
மழை மற்றும் வெள்ளத்தால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் தங்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். மழையால் சேதமான கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

உத்தரகாண்ட் மழை மற்றும் வெள்ள பாதிப்பு நிலவரம் குறித்து பிரதமர் மோடி முதல் மந்திரி புஷ்கர் சிங்கிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என பிரதமர் உறுதியளித்தார்.

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி இன்று ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். அப்போது மந்திரி தன்சிங் ராவத், மாநில டிஜிபி அஷோக் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

அதன்பின் முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி கூறுகையில், வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டேன். மழை பாதிப்பு பகுதிகளில் சிக்கியுள்ள மக்கள் மற்றும் சுற்றுலாவாசிகளை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீட்பு பணிகளில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 

Tags:    

Similar News