செய்திகள்
மோன்சன் மாவுங்கல்

பழங்கால பொருட்கள் விற்பதாக கூறி ரூ.10 கோடி மோசடி செய்தவர் கைது

Published On 2021-09-27 07:07 GMT   |   Update On 2021-09-27 07:07 GMT
மோன்சன் மாவுங்கல் விற்பனை நிலையத்திற்கு சென்று வந்த நடிகர், நடிகைகள் யார் என்பதை கண்டறிந்து அவர்களிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்தவர் மோன்சன் மாவுங்கல்.

கொச்சி, கலூர் பகுதியில் மோன்சன் மாவுங்கல் பழங்கால பொருட்கள் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இங்கு பல நூறு ஆண்டுகள் பழமையான பொருட்கள் இருப்பதாகவும், மன்னர் கால கலை பொருட்களை சேமித்து வைத்திருப்பதாகவும் கூறி வந்தார்.

இவரது வீடும், கலை பொருட்கள் விற்பனை நிலையமும் பிரமாண்டமாக இருப்பதால் இங்கு பல முக்கிய பிரமுகர்கள் வந்து சென்றனர். அவர்களுடன் நடிகர், நடிகைகளும் இக்கலை பொருட்களை பார்க்க வந்துள்ளனர்.

பழங்கால பொருட்கள் விற்பனை நிலையத்துக்கு வரும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் நடிகர், நடிகைகளுடன் மோன்சன் மாவுங்கல் புகைப்படம் எடுத்து கொள்வார்.

அதனை சமூக ஊடகங்களில் வெளியிட்டு தனக்கு பெரும் செல்வாக்கு இருப்பது போல கூறி வந்தார். மேலும் வளைகுடா நாடுகளில் உள்ள மன்னர் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு பழங்கால பொருட்களை விற்பனை செய்ததாகவும், இதன் மூலம் டெல்லியில் உள்ள அரசு வங்கியில் ரூ. 2,62,000 கோடி இருப்பதாகவும் கூறிவந்தார்.

இந்த நிலையில் இவர் விற்பனை செய்த பல பொருட்கள் போலியானது என தெரியவந்தது. இது பற்றி பலரும் போலீசில் புகார் செய்தனர்.

இதுபோல மோன்சன் மாவுங்கல் பற்றி கோழிக்கோடு பகுதியை சேர்ந்த யாக்கோபு, சித்திக், சலீல், சமீர், அனீஸ், அகமது,சானிமோன் ஆகியோர் முதல் மந்திரி பினராய் விஜயன் அலுவலகத்துக்கு ஒரு புகார் மனு அனுப்பினர்.

அதில் மோன்சன் மாவுங்கல் தங்களுக்கு வட்டியில்லாமல் தொழில் செய்ய கடன் தருவதாகவும், இதற்கு ரூ.10 கோடி தரவேண்டும் எனவும் கூறினார். அதனை நம்பி நாங்கள் அவருக்கு பணம் கொடுத்தோம். ஆனால் அவர் கூறியபடி தங்களுக்கு தொழில் செய்ய கடன் தரவில்லை. மேலும் தாங்கள் கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து நாங்கள் கொடுத்த பணத்தை மீட்டு தரவேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதுபற்றி கொச்சி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர். இதில் மோன்சன் மாவுங்கல் பலரிடம் பண மோசடி மற்றும் போலி புராதன பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து மோன்சன் மாவுங்கலை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மோன்சன் மாவுங்கலின் விற்பனை நிலையத்திற்கு பல நடிகர், நடிகைகள் சென்று வந்துள்ளனர். புராதன பொருட்கள் எனக்கூறி அவர்களிடமும் மோன்சன் மாவுங்கல் பண மோசடி செய்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். மோன்சன் மாவுங்கல் விற்பனை நிலையத்திற்கு சென்று வந்த நடிகர், நடிகைகள் யார் என்பதை கண்டறிந்து அவர்களிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News