செய்திகள்
மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு: டெல்லி போலீஸ் மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
டெல்லியில் இன்று கோர்ட்டில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லியின் ரோகினி பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் இன்று வழக்கம்போல் நீதிமன்ற பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என பலர் தங்கள் வழக்கு விசாரணைக்காக வந்திருந்தனர்.
இந்நிலையில், நீதிமன்ற வளாகத்திற்குள் இன்று பிற்பகல் திடீரென புகுந்த ஒரு கும்பல் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியது. இதில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய தாதாவான ஜிதேந்தர் கோகி கொல்லப்பட்டார். துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது போலீசார் பதில் தாக்குல் நடத்தினர். இதில், 3 பேர் உயிரிழந்தனர். அவர்களில் இரண்டு பேர் வழக்கறிஞர் போன்று உடை அணிந்திருந்தனர்.
இச்சம்பவம் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் பரத்வாஜ் கூறுகையில் ‘‘இது மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு’’ எனத் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசு அவர்களுக்கு சாதகமான அதிகாரி ராகேஷ் அஸ்தானாவை டெல்லி கமிஷனராக போட்டுக்கொண்டு அனைத்து விதிகளையும் மீறுகிறது. உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இதுகுறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்றார்.
இதற்கு பதில் அளித்த பா.ஜனதா தலைவர் நீல்கண்ட் பக்ஷி ‘‘ஆளும் கட்சியான ஆம் ஆத்மி இது போன்ற ஒரு முக்கிய நிகழ்வின்போது கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். இதில் அரசியல் விளையாட்டை தவிர்க்க வேண்டும்’’ என்றார்.