செய்திகள்
பஞ்சாப் மாநிலத்தின் 16வது முதல்வராக பதவியேற்றார் சரண்ஜித் சிங் சன்னி
சித்துவுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் மன உளைச்சலுக்கு ஆளான முதல்வர் அமரீந்தர் சிங் பதவி விலகியதையடுத்து சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. கடந்த 2019-ம் ஆண்டு, முதல்வருடன் ஏற்பட்ட மோதலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து மந்திரிசபையில் இருந்து விலகினார். அதில் இருந்து அவருக்கும், அமரீந்தர் சிங்குக்கும் இடையே பனிப்போர் தொடங்கியது. அது மோதலாகவும் மாறி இருவரும் ஒருவரையொருவர் விமர்சிக்கும் போக்கு நிலவியது.
இந்தநிலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட திருப்பங்கள், அமரீந்தர் சிங்குக்கு எதிராக மாறின. இதில் மன உளைச்சலுக்கு ஆளான அமரிந்தர் சிங், மாநிலத்தில் தனக்கு எதிராக நடந்து வருகிற சமீபத்திய நிகழ்வுகளை வேதனையுடன் விவரித்து சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார். அதன்பின்னர் அவர் பதவி விலகினார்.
அதைத்தொடர்ந்து நேற்று மாலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இதில் சட்டசபை காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக (முதல்வராக) சித்துவின் ஆதரவாளரான சரண்ஜித் சிங் சன்னி (வயது58) தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அமரீந்தர் சிங் மந்திரிசபையில் தொழில்கல்வித்துறை மந்திரியாக பதவி வகித்த தலித் தலைவர் ஆவார்.
சட்டசபை காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சரண்ஜித் சிங் சன்னி, கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவரை புதிய அரசு அமைக்குமாறு கவர்னர் பன்வாரிலால் புரோகித் அழைப்பு விடுத்தார்.
அதன்படி, இன்று காலை 11 மணியளவில் கவர்னர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாநிலத்தின் 16வது முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இதன்மூலம், பஞ்சாப் மாநிலத்தின் முதல் தலித் இன முதல்வர் என்ற சிறப்பை பெற்றுள்ளார் சரண்ஜித் சிங் சன்னி.
இதையும் படியுங்கள்... கர்நாடக மாநிலத்தில் மோடி அலையால் மட்டும் பா.ஜனதா ஜெயிக்கவில்லை - எடியூரப்பா