செய்திகள்
அரசு ஊழியர்கள் தடுப்பூசி போடாவிட்டால் கட்டாய விடுப்பு- பஞ்சாப் அரசு அதிரடி
அரசியல் கூட்டங்கள் உள்ளிட்ட அனைத்து பொது நிகழ்வுகளிலும் அதிகபட்சம் 300 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று பஞ்சாப் அரசு கூறி உள்ளது.
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை வரும் 30ம் தேதிவரை நீட்டித்து முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். வரவிருக்கும் பண்டிகை சீசனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், அரசியல் கூட்டங்கள் உள்ளிட்ட அனைத்து பொது நிகழ்வுகளிலும் அதிகபட்சம் 300 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், முக கவசம் அணிதல், சமூக இடைவெளி ஆகிய நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பஞ்சாப் அரசு ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி ஒரு தவணையாவது போட்டிருக்க வேண்டும். மருத்துவம் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் தடுப்பூசி போட தவறிய அரசு ஊழியர்கள் செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு கட்டாயமாக விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என்றும் முதல்வர் அலுவலகம் கூறி உள்ளது.
மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தொற்று குறைவாகவே உள்ளது. நேற்று புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இரண்டு நபர்கள் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... பவானிபூர் இடைத்தேர்தல்- வேட்புமனு தாக்கல் செய்தார் மம்தா பானர்ஜி