செய்திகள்
கொரோனாவால் ஏற்படும் இறப்பை தடுப்பதில் தடுப்பூசியின் செயல்திறன் எவ்வளவு தெரியுமா?
ஏப்ரல்-மே மாதங்களில் பேரழிவை ஏற்படுத்திய கொரோனா 2ம் அலையின்போது தடுப்பூசி போடாதவர்களில்தான் பெரும்பாலானோர் இறந்துள்ளதாக மத்திய அரசு கூறி உள்ளது.
புதுடெல்லி:
இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்குடன் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. கொரோனாவை வெல்லும் பேராயுதமாக தடுப்பூசி விளங்குவதால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். கொரோனாவால் ஏற்படும் இறப்பு அபாயத்தை தடுப்பூசி பெருமளவு குறைக்கிறது. இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகின்றன.
அவ்வகையில், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி கொரோனா தடுப்பூசியின் ஒரு தவணை மட்டும் செலுத்திக்கொண்டால் உயிரிழப்பை 96.6 சதவீதம் தடுப்பதாகவும், இரண்டு தவணை செலுத்திக்கொண்டால் 97.5 சதவீதம் இறப்பை தடுப்பதாகவும் தெரியவந்துள்ளது. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடுவது இறப்பைத் தடுக்கிறது என்றும், ஏப்ரல்-மே மாதங்களில் பேரழிவை ஏற்படுத்திய கொரோனா 2ம் அலையின்போது தடுப்பூசி போடாதவர்களில்தான் பெரும்பாலானோர் இறந்துள்ளதாகவும் மத்திய அரசு கூறி உள்ளது.