செய்திகள்
சஞ்சய் ராவத்

அமலாக்கத்துறை சம்மன் என்பது அரசியல்வாதிகளுக்கு அனுப்பப்படும் காதல் கடிதம்: சஞ்சய் ராவத் கிண்டல்

Published On 2021-08-31 02:05 GMT   |   Update On 2021-08-31 02:05 GMT
வலுவான மற்றும் அசைக்க முடியாத மகா விகாஸ் அகாடி அரசின் கோட்டை சுவரை உடைக்க எடுத்த முயற்சிகள் தோல்வியுற்ற பிறகு இதுபோன்று காதல் கடிதங்கள் அதிகரித்துள்ளன.
மும்பை

மராட்டிய முன்னாள் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் மீதான பண மோசடி வழக்கில் சிவசேனா தலைவரும், மந்திரியுமான அனில் பரப்பை நேரில் ஆஜராகுமாறு அமலாகத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

இதுதொடர்பாக சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அமலாக்கத்துறை சம்மன் என்பது அரசியல்வாதிகளுக்கு அனுப்பப்படும் காதல் கடிதம் போன்றது. அது மரண வாரண்ட் கிடையாது.

வலுவான மற்றும் அசைக்க முடியாத மகா விகாஸ் அகாடி அரசின் கோட்டை சுவரை உடைக்க எடுத்த முயற்சிகள் தோல்வியுற்ற பிறகு இதுபோன்று காதல் கடிதங்கள் அதிகரித்துள்ளன. அனில் பரப்பை பா.ஜனதா தலைவர்கள் குறிவைக்கின்றனர். ஆனால் இந்த சம்மனுக்கு அவர் பதிலளிப்பார் மற்றும் அமலாக்கத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குவார்.

பா.ஜனதாவை பொறுத்தவரை அக்கட்சியை சேர்ந்தவர் அமலாக்கத்துறையில் அதிகாரியாக இருக்கவேண்டும் அல்லது அமலாக்கதுறை அதிகாரி பா.ஜனதா அலுவலகத்தில் வேலை செய்யவேண்டும் என்று கருதுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவர் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மூடப்பட்டு இருக்கும் மராட்டிய கோவில்களை திறக்க வலியுறுத்தி போராட்டம் நடத்த பா.ஜனதா ஏற்பாடு செய்திருப்பதை கடுமையாக சாடினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “பண்டிகை காலம் வர உள்ளதால் கொரோனா பரவும் அச்சம் எழுத்துள்ளது. இதனால் மாநில அரசுகள் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதை மராட்டிய அரசு பின்பற்றுகிறது. மத்திய அரசும் இந்துக்களுக்கு ஆதரவானது என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
Tags:    

Similar News