செய்திகள்
பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் ஊழல் வழக்கில் கைது
கைது செய்யப்பட்ட சியாமா பிரசாத் முகர்ஜியை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
கொல்கத்தா:
மேற்கு வங்காள முன்னாள் அமைச்சரும், சமீபத்தில் பாஜகவில் இணைந்த முக்கிய தலைவருமான சியாமா பிரசாத் முகர்ஜி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், பிஷ்னுபூர் நகராட்சி தலைவராக பதவி வகித்த காலத்தில் ரூ.10 கோடி அளவிற்கு நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், இன்று அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பங்குரா எஸ்.பி. திரிதிமான் சர்க்கார் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சியாமா பிரசாத் முகர்ஜியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு அளித்தனர். மனுவை ஏற்ற கோர்ட், சியாமா பிரசாத் முகர்ஜியை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது. இதனையடுத்து சியாமா பிரசாத்தை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
பலருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், விசாரணைக்குப் பிறகு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், அவர்கள் திரிணாமுல் காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த பிறகு கைது செய்யப்பட்டுள்ளனர், என மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் குற்றம்சாட்டி உள்ளார்.