செய்திகள்
தலிபான்களுக்கு ஆதரவு- அசாமில் 14 பேரை கைது செய்தது போலீஸ்
தலிபான்களுக்கு ஆதரவு தெரிவிப்பது இனவாத பதற்றங்களை உருவாக்கும் என காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.
கவுகாத்தி:
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியதை இந்தியாவில் சிலர் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். தலிபான்களுக்கு ஆதரவான கருத்துக்களையும் பதிவிடுகின்றனர். அவர்களை காவல்துறை கண்காணித்து வருகிறது.
இந்நிலையில், அசாமில், தலிபான்களுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக அசாம் மாநில சிறப்பு டி.ஜி.பி., சிபி சிங் கூறுகையில், தலிபான்களுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட 14 பேரை கைது செய்துள்ளோம். நேற்று இரவு முதல் இந்த கைது நடவடிக்கை துவங்கியது. சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிடுதல் மற்றும் பகிரும் போது, பயனாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கைகளை சந்திக்க வேண்டும், என தெரிவித்தார்.
சிலர் நேரடியாக தலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தலிபான்களை ஆதரிக்காததற்காக இந்தியாவுக்கும் தேசிய ஊடகத்திற்கும் எதிரான கருத்துக்களை சிலர் பதிவிட்டுள்ளனர். இந்த செயல் இனவாத பதற்றங்களை உருவாக்கும், என காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.