செய்திகள்
திரிபுராவில் துணிகரம் - கொடி ஏற்ற சென்ற திரிணாமுல் எம்.பி. மீது பாஜகவினர் தாக்குதல்
திரிபுராவில் 2023-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அங்கு பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.
அகர்தலா:
திரிபுராவில் வரும் சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் கட்சியைப் பலப்படுத்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் அங்கு சென்று, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.
இதனால் திரிபுரா மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் பா.ஜ.க.வுக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், சுதந்திர தினத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டோலா சென் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று தேசியக்கொடி ஏற்றுவதற்காக திரிபுரா சென்றார்.
பெலோனியா நகர் அருகே அவர் காரில் சென்றபோது பா.ஜ.க. ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதில், தனது கார் சேதமடைந்து விட்டது என்றும், அவருடன் வந்த ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.