செய்திகள்
சென்னையில் சுப்ரீம் கோர்ட்டு கிளையா? மத்திய அரசு பதில்
முக்கிய நகரங்களில் சுப்ரீம் கோர்ட்டு கிளைகள் அமைக்கப்படவுள்ளதாக அண்மையில் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.
புதுடெல்லி:
இந்தியாவில் கடந்த 1950-ம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ந் தேதி முதல் சுப்ரீம் கோர்ட்டு செயல்பட்டு வருகிறது. இந்த கோர்ட்டு தலைநகர் டெல்லியில் அமைந்துள்ளது.
இந்த சூழலில் டெல்லிக்கு வெளியே சுப்ரீம் கோர்ட்டின் கிளைகளை திறக்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு அதனை விரும்பவில்லை என பல முறை நாடாளுமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய முக்கிய நகரங்களில் சுப்ரீம் கோர்ட்டு கிளைகள் அமைக்கப்படவுள்ளதாக அண்மையில் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. ஆனால் மத்திய அரசு இந்த தகவலை மறுத்துள்ளது.
இதுகுறித்து பத்திரிகை தகவல் பணியகத்தின் உண்மை சோதனை பிரிவு டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “இந்திய சுப்ரீம் கோர்ட்டுக்கு 3 இடங்களில் கிளைகள் அமைத்து அதை விரிவுபடுத்த அரசு முடிவு செய்துள்ளதாக கூறி வாட்ஸ்-அப்பில் பகிரப்பட்ட செய்தி போலியானது. அதுபோன்ற எந்த முடிவும் அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது.