செய்திகள்
பாராளுமன்றத்துக்கு சைக்கிளில் சென்ற ராகுல்காந்தி

பாராளுமன்றத்துக்கு இன்று எதிர்க்கட்சி எம்பிக்கள் சைக்கிள் பேரணி

Published On 2021-08-03 07:05 GMT   |   Update On 2021-08-03 07:05 GMT
ராகுல் காந்தி தலைமையில் கூட்டம் நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில் பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டமும் தனியாக நடத்தப்பட்டது. எனவே இரு கட்சிகளும் நடத்திய கூட்டங்கள் போட்டி கூட்டமாக அமைந்தன.
புதுடெல்லி:

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இதனால் ஒருநாள் கூட சபை முழுமையாக நடைபெறவில்லை. தினமும் முடக்கப்பட்டு வருகிறது. இதுவரை 10 நாட்கள் சபை முடங்கியது.

முதலில் விவசாயிகள் பிரச்சனை, விலைவாசி பிரச்சனை போன்றவற்றை கிளப்பினார்கள். அதன் பிறகு டெலிபோன் ஒட்டு கேட்பு விவகாரம் வெளிவந்தது. இப்போது இந்த பிரச்சனையை எழுப்பி தினமும் அமளி நடந்து வருகிறது.

டெலிபோன் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும், பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி இது சம்பந்தமாக பதில் அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள்.

ஆனால் அரசு தரப்பில்  இது சம்பந்தமாக விவாதம் நடத்த தயாராக இல்லை. எனவே பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தங்கள் போராட்டத்தை தீவிரமாக்கி உள்ளன. இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் திரண்டுள்ளன.

கடந்த வாரம் ராகுல் காந்தி, எதிர்க்கட்சித் தலைவர்களுடன் தனியாக ஆலோசனை மேற்கொண்டார்.  அப்போது 13 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து இன்று  மீண்டும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் ராகுல் காந்தி, எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் எம்.பி.க்களுக்கு காலை விருந்து அளித்தார். பாராளுமன்றம் அருகே உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் இந்த விருந்து நடந்தது.


காலை 9.30 மணிக்கு விருந்து தொடங்கியது. இதில் தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, ராஷ்ட்ரீய ஜனதா தளம், தேசிய மாநாட்டு கட்சி, ஆர்.எஸ்.பி. உள்ளிட்ட 17 கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். அப்போது டெலிபோன் ஒட்டு கேட்பு பிரச்சனையில் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

பெகாசஸ்’ உளவு சாப்ட்வேர் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று வற்புறுத்துவது குறித்தும் ஆலோசித்தனர்.

போட்டி பாராளுமன்றம் நடத்தவும், ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் ‘
பெகாசஸ்
’ மற்றும் பெட் ரோல்- டீசல் விலை உயர்வை சுட்டிக் காட்டும் வகையில் பாராளுமன்றத்துக்கு எம்.பி.க்கள் சைக்கிளில் செல்வது  என்று முடிவு எடுத்தனர்.

கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது, ‘‘நாம் அனைவரும் ஒருங்கிணைந்து வலிமையான இயக்கமாக மாற வேண்டும். நமது குரல் சக்தி வாய்ந்ததாக ஒலிக்க வேண்டும்’’ என்று கூறினார்.

எம்.பி.க்கள் கூட்டம் முடிந்ததும் அனைவரும் பாராளுமன்றத்துக்கு புறப்பட்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி  கூட்டம் நடந்த அரங்கில் இருந்து அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் சைக்கிளில் பாராளுமன்றத்துக்கு சென்றார்கள். ராகுல் காந்தியும் சைக்கிளில் சென்றார். அவர்கள் செல்லும் பாதையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ராகுல்காந்தி கடந்த வாரம் விவசாயிகள் பிரச்சனைக்காக டிராக்டரில் பாராளுமன்றம் சென்றது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தி தலைமையில் கூட்டம் நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில் பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டமும் தனியாக நடத்தப்பட்டது. எனவே இரு கட்சிகளும் நடத்திய கூட்டங்கள் போட்டி கூட்டமாக அமைந்தன.

பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அவர் ஆலோசனைகளை வழங்கினார்.

எதிர்க்கட்சிகள் வகுக்கும் வியூகங்களை எப்படி உடைத்து எறிய வேண்டும்?  ஏற்கனவே பாராளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வருகின்றன. அடுத்து நடக்கக் கூடிய கூட்டங்களில் அவர்களை எப்படி எதிர்கொள்வது?  என்பது குறித்து விரிவாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தினமும் தொடர்ந்து கோஷங்களை எழுப்பி வருகின்றன. எதிர்க்கட்சிகளை நாங்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளோம். கோவிட் தொற்று, பெகாசஸ் விவகாரம் போன்றவற்றை விவாதிக்கலாம் என்று அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

ஆனால் அவர்கள் தினமும் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், பாராளுமன்றத்துக்கு வெளியேயும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இது பாராளுமன்றத்தை அவமதிக்கும் செயல்.

அரசு மக்களுக்காக செயல்படுத்தும் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து எடுத்து வருகிறோம். பா.ஜனதா எம்.பி.க்கள் இந்த கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்று மக்களுக்குரிய திட்டங்களை செயல்படுத்த ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரி அமித்ஷா, மத்திய மந்திரிகள் மற்றும்  பல தலைவர்களும் கலந்து கொண்டனர்.

பா.ஜனதா- எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தனித்தனியாக கூடி ஆலோசனை நடத்தி இருப்பது தேசிய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News