செய்திகள்
அகிலேஷ் யாதவ்

சிறிய கட்சிகளுடன் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன: அகிலேஷ் யாதவ்

Published On 2021-08-02 01:59 GMT   |   Update On 2021-08-02 01:59 GMT
காங்கிரசும், பகுஜன் சமாஜூம் எங்கள் கட்சியைத் தாக்கி வருகிற நிலையில் அவை எந்தப்பக்கம் என கேட்கிறீர்கள். இந்தக்கட்சிகள் எதிர்த்து நிற்பது பா.ஜ.க.வையா அல்லது சமாஜ்வாடி கட்சியையா என்பதை முடிவு செய்ய வேண்டும்.
லக்னோ :

நாட்டின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அங்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதில் ஆட்சியைத் தக்க வைக்க பா.ஜ.க.வும், ஆட்சியைக் கைப்பற்ற சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகளும் வரிந்து கட்டுகின்றன.

இந்தநிலையில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் கூட்டணிக்கு அனைத்து சிறிய கட்சிகளுக்கும் சமாஜ்வாடிகட்சியின் கதவுகள் திறந்தே உள்ளன.
பா.ஜ.க.
வை வீழ்த்துவதற்கு இத்தகைய கட்சிகளை ஒன்றிணைக்க நான் முயற்சி எடுப்பேன்.

காங்கிரசும், பகுஜன் சமாஜூம் எங்கள் கட்சியைத் தாக்கி வருகிற நிலையில் அவை எந்தப்பக்கம் என கேட்கிறீர்கள். இந்தக்கட்சிகள் எதிர்த்து நிற்பது பா.ஜ.க.வையா அல்லது சமாஜ்வாடி கட்சியையா என்பதை முடிவு செய்ய வேண்டும்.

எனது சித்தப்பா சிவபால் யாதவின் பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட முயற்சித்தாலும், பா.ஜ.க. வை தோற்கடிக்க அனைத்துக்கட்சிகளையும் ஒன்று திரட்ட முயற்சிப்பேன்.



பகுஜன் சமாஜ் மற்றும் பிற கட்சிகள் பிராமண சம்மேளனம் போன்ற சாதி மாநாடு நடத்துவது பற்றி கேட்கிறீர்கள். அத்தகைய மாநாடுகளை சமாஜ்வாடி கட்சியும் நடத்தியது உண்டு.

கட்சியின் சிந்தனையாளரான ஜானேஷ்வர் மிஸ்ராவின் பிறந்த நாளான ஆகஸ்டு 5-ந் தேதி நாங்கள் யாத்திரை நடத்துவோம். 15-ந் தேதியிலிருந்து பா.ஜ.க.வின் தவறான ஆட்சியை வெளிப்படுத்துகிற வகையில் அதிகமான யாத்திரைகளை நடத்துவோம்.

மாநிலத்தில் பா.ஜ.க. அரசு கடந்த 4 ஆண்டுகளில் எந்த உள் கட்டமைப்புகளையும் உருவாக்கவில்லை. கொரோனா நெருக்கடியில்கூட நாங்கள் எங்கள் ஆட்சியில் உருவாக்கிய கட்டமைப்பு வசதிகள்தான் பயன்படுத்தப்பட்டன. வாஜ்பாய் பெயரில் அவர்கள் ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்கினர். அதுகூட நாங்கள் எங்கள் ஆட்சியில் உருவாக்கிய ராம் மனோகர் லோகியா மருத்துவ கல்வி நிறுவனத்தின் 9-வது மாடியில்தான் இயங்குகிறது.

கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களே மகிழ்ச்சியாக இல்லை.

வேட்பாளர்களை அறிவிக்க அவகாசம் உள்ளது. அதுபற்றிய வேலைகள் நடந்து வருகின்றன. ஆலோசனைகள், ஆய்வுகளுக்கு பின்னர் சரியான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். எங்கள் கட்சி சட்டசபை தேர்தலில் 350 இடங்களில் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News