செய்திகள்
மேற்கு வங்காளத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து வருகின்றன.
கொல்கத்தா:
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், ஒரு சில மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் பதிவாகி வருகிறது. மக்களின் வாழ்வாதாரம் கருதி ஒவ்வொரு மாநிலங்களிலும் மாநில அரசுகள் சில தளர்வுகளை அவ்வப்போது அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் ஏற்கனவே ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமலில் உள்ள நிலையில், தற்போதும் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மேற்கு வங்காள மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சுகாதார சேவைகள், சட்டம் ஒழுங்கு மற்றும் அத்தியாவசிய தேவைகளைத் தவிர மற்ற அனைத்துப் பணிகளுக்கும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி நிலையங்கள், அழகு நிலையங்கள் ஆகியவை காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேருந்துகள், ஆட்டோ, டாக்சி ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளுடன் பயணிகள் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.