செய்திகள்
மேகதாது அணை கட்டியே தீருவோம்- கர்நாடக புதிய முதல்வர் திட்டவட்டம்
மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழகத்திற்குத் தான் அதிக பலன் கிடைக்கும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை குறிப்பிட்டார்.
பெங்களூரு:
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்பதால் தமிழக அரசு இந்த அணையை கட்டக்கூடாது என்று தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
சமீபத்தில் டெல்லி சென்ற தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் இதுதொடர்பாக வலியுறுத்தினார். அனைத்து கட்சி குழுவினர் மத்திய மந்திரியை சந்தித்து பேசினர். காவிரியின் குறுக்கே எந்த புதிய அணையும் கட்டக்கூடாது என்று உத்தரவு உள்ள நிலையில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார்கள். என்றாலும் மேகதாது பகுதியில் அணை கட்டுவதில் கர்நாடகா உறுதியாக உள்ளது.
இந்த நிலையில் கர்நாடகாவின் புதிய முதல்வராக இன்று பதவியேற்ற பசவராஜ் பொம்மை, மேகதாது அணை கட்டியே தீருவோம் என்று திட்டவட்டமாக கூறி உள்ளார்.
விரைவில் மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று மேகதாது அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கும் என்று கூறிய அவர், அணை கட்டினால் பெங்களூருவுக்கு தேவையான குடிநீரை பெறுவதுடன் மின் உற்பத்தியும் செய்ய முடியும் என்றார். மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழகத்திற்குத் தான் அதிக பலன் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.
இதையும் படியுங்கள்... மேகதாது அணை பிரச்சினை- சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு?