செய்திகள்
வன்முறை

மிசோரம் எல்லையில் பயங்கர வன்முறை... 6 அசாம் போலீஸ்காரர்கள் உயிரிழப்பு

Published On 2021-07-26 15:52 GMT   |   Update On 2021-07-26 15:52 GMT
எல்லையில் நடந்த வன்முறை தொடர்பாக இரு மாநில முதல்வர்களும் டுவிட்டரில் வீடியோக்களை பதிவு செய்து, கருத்து மோதல்களில் ஈடுபட்டனர்.
ஷில்லாங்:

அசாம், மிசோரம் மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. அசாம் மாநிலத்தின் எல்லையான கொலாசிப் மாவட்டம் மற்றும் மிசோரம் மாநில எல்லையான சச்சார் மாவட்டத்தில் அவ்வப்போது மோதல்கள் நிகழ்கின்றன. அடுத்தடுத்து பேச்சுவார்த்தைகள் நடத்தியபோதிலும், முடிவு எட்டப்படவில்லை.

இந்நிலையில், எல்லையில் பிரச்சனைக்குரிய பகுதியில் இன்று மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. துப்பாக்கி சூடும் நடந்துள்ளது. மோதலின்போது அரசு வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 6 போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டதாக அந்த மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறி உள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்களை உள்துறை மந்திரி அமித் ஷா சந்தித்து பேசிய இரண்டு நாட்களில் இந்த வன்முறை ஏற்பட்டதால் இந்த விவகாரம் மீண்டும் உள்துறை மந்திரியின் கவனத்திற்கு சென்றுள்ளது. உடனடியாக அவர் இரண்டு மாநில முதல்வர்களையும் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி எல்லை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என அமித் ஷா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

பின்னர் பிரச்சனைக்குரிய பகுதியில் இருந்து இரு மாநில போலீஸ் படைகளும் திரும்பிச் சென்றுள்ளன.

இந்த மோதல் தொடர்பாக இரு மாநில முதல்வர்களும் டுவிட்டரில் வீடியோக்களை பதிவு செய்து, கருத்து மோதல்களில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News