செய்திகள்
கொரோனா வைரஸ்

3-வது அலையின் பாதிப்பு எப்படி இருக்கும்?: நிபுணர்கள் தகவல்

Published On 2021-07-26 02:02 GMT   |   Update On 2021-07-26 07:48 GMT
ஊரடங்கு இல்லாத நிலையில், புதிய உருமாறிய வைரஸ்கள் வந்தால், அதுவும் எதிர்ப்பு சக்தியில் இருந்து அவை தப்பினால் தான் 3-வது அலை நம்பத்தகுந்ததாக அமையும்.
புதுடெல்லி :

கொரோனாவின் 3-வது அலை பாதிப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் கொரோனா தீவிர சிகிச்சை பிரிவு நிபுணர் டாக்டர் யுத்யாவிர் சிங் கூறியிருப்பது:-

பாதிப்பு குறைவாக இருக்கிறபோது, பொருளாதார நடவடிக்கைகளை தொடங்குவது முக்கியமதான். ஆனாலும் கொரோனாவுக்கு எதிராக பாதுகாக்கப்பட்ட அணுகுமுறை தேவை. டெல்லியில் பெரும்பாலோர் மந்தை எதிர்ப்புச்சக்தியை பெற்றுவிட்டனர்.

சர்கங்காராம் ஆஸ்பத்திரியின் மருத்துவ துறை மூத்த ஆலோசகர் டாக்டர் பூஜா கோஸ்லா:-

உலகின் பல பகுதிகளில் இருந்தும் எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன. இந்தியாவிலும் உள்ளது. 2-வது அலை போன்ற நெருக்கடியைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

எல்லாவற்றையும் திறந்து விடுவது நல்லதல்ல, 3-வது அலை விரைவில் வரலாம் என எல்லோரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

மவுலானா ஆசாத் மருத்துவ கல்லூரி சமூக மருத்துவ துறை பேராசிரியை பிரக்யா சர்மா:-

3-வது அலை நிச்சயமான ஒன்று. கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதையும், தடுப்பூசி போடுவதையும் பொறுத்துதான் பாதிப்பு அமையும்.

ஆனால் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதில்லை அல்லது சரியாக அணிவதில்லை. துணியிலான முகக்கவசத்தை பலரும் அணிவது பலன்தராது.

சப்தர்ஜிங் ஆஸ்பத்திரி சமூக மருத்துவ துறை தலைவர் டாக்டர் ஜூகல் கிஷோர்:-

டெல்லியில் கொரோனாவுக்கு எதிராக 80 சதவீத மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றுள்ளனர். 2-வது அலையில் 60 சதவீதத்தினர் பாதிப்புக்கு காரணம் டெல்டா வைரஸ். டெல்டாவுக்கும், டெல்டா பிளசுக்கும் இடையே பெரிய வித்தியாசத்தை நாங்கள் பார்க்கவில்லை. புதிய உருமாறிய வைரஸ்கள் தோன்றாத வரையில், 3-வது அலையில் பெரிய அளவு பாதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கவில்லை.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலை சேர்ந்த டாக்டர் சமிரன் பாண்டா:-

2-வது அலையைப் போன்று 3-வது அலை மோசமாக இருக்காது. ஊரடங்கு இல்லாத நிலையில், புதிய உருமாறிய வைரஸ்கள் வந்தால், அதுவும் எதிர்ப்பு சக்தியில் இருந்து அவை தப்பினால் தான் 3-வது அலை நம்பத்தகுந்ததாக அமையும்.

3-வது அலையின் தாக்கத்தைத் தணிக்க தடுப்பூசிகள் போடுவது அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு மருத்துவ நிபணர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News