செய்திகள்
சிவசேனா

பெகாசஸ் மென்பொருளுக்கு நிதி கொடுத்தது யார்? - சிவசேனா கேள்வி

Published On 2021-07-25 21:05 GMT   |   Update On 2021-07-25 21:05 GMT
நாட்டின் தலைநகரில் சுதந்திரத்திற்கான சூழல் சில ஆண்டுகளுக்கு முன்பே முடிவுக்கு வந்துவிட்டது என சிவசேனா தெரிவித்துள்ளது.
மும்பை:

பெகாசஸ் எனப்படும் இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்பு மூலம் இந்தியாவில் எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் உளவு பார்க்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. எனினும் இந்த தகவலை மத்திய அரசு மறுத்தது.

இந்நிலையில், பெகாசஸ் மூலம் உளவு பார்க்க நிதி உதவி அளித்தது யார்? என சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி பத்திரிகையான சாம்னாவில் கூறியிருப்பதாவது:

நவீன தொழில்நுட்பம் நம்மை மீண்டும் அடிமைக்காலத்திற்கு கொண்டு சென்றுள்ளது. பெகாசஸ் உளவு பார்க்கப்பட்ட சம்பவத்திற்கும், ஹிரோஷிமாவில் குண்டு போட்டதிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஹிரோஷிமாவில் மக்கள் உயிரிழந்தனர். பெகாசஸ் சம்பவத்தில் சுதந்திரம் உயிரிழந்துள்ளது. 



அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சமூக ஆா்வலர்கள் தாங்கள் உளவு பார்க்கப்படலாம் என்ற அச்சத்தில் உள்ளனர். நீதி துறையினரும், ஊடக பிரிவினரும் அதே அழுத்தத்தில் உள்ளனர்.

பெகாசஸ் மென்பொருள் (சாப்ட்வேர்) ஒரு லைசன்சுக்கு இஸ்ரேல் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.60 கோடி கட்டணம் வசூலித்துள்ளது. ஒரு லைசன்சில் 50 பேரை உளவு பார்க்க முடியும். அப்போது 300 பேரை உளவு பார்க்க 6-ல் இருந்து 7 லைசன்ஸ் தேவைப்படும். எவ்வளவு பணம் செலவிடப்பட்டு இருக்கிறது? யார் இந்தத் தொகையை கொடுத்தது? 

இஸ்ரேல் நிறுவனம் அரசுகளுக்கு மட்டுமே பெகாசஸ் விற்கப்பட்டதாகக் கூறுகிறது. அப்படியென்றால் இந்தியாவில் எந்த அரசு அந்த மென்பொருளை வாங்கியது? இந்தியாவில் 300 பேரை உளவு பார்க்க ரூ.300 கோடி செலவிடப்பட்டுள்ளது. உளவு பார்க்க இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்ய நமது நாட்டுக்கு தகுதி இருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளது.
Tags:    

Similar News