செய்திகள்
போராட்டக் களத்தை மாற்றுவார்களா விவசாயிகள்? -நாளை பேச்சுவார்த்தை
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பாராளுமன்றம் முன்பு 200 விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயித் தெரிவித்தார்.
புதுடெல்லி:
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் கடந்த நவம்பர் மாதம் முதல் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். மத்திய அரசு தரப்பில் விவசாயிகளுடன் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால், போராட்டம் நீடிக்கிறது.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில், விவசாயிகள் ஜூலை 22ம் தேதி முதல் பாராளுமன்றம் முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடையும் வரை அங்கு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
விவசாயிகள் அங்கு போராட்டம் நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, விவசாயிகளை வேறு இடத்தில் போராட்டம் நடத்தக்கோரி காவல்துறை மூத்த அதிகாரிகள் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
ஆனால் திட்டமிட்டபடி போராட்டத்தை தொடருவதில் விவசாய சங்கங்கள் உறுதியாக உள்ளன. 2 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பாராளுமன்றம் முன்பு 200 விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயித் தெரிவித்தார். இது அமைதியான போராட்டமாக இருக்கும் என்றும், நாங்கள் பாராளுமன்றத்திற்கு வெளியே உட்கார்ந்து போராடுவோம், அதே நேரத்தில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடரும் என்றும் கூறினார்.
இதையும் படியுங்கள்... கொரோனா 3-வது அலை: அடுத்த 100 நாட்கள் அபாயகரமானது - மத்திய அரசு எச்சரிக்கை