செய்திகள்
மத்திய மந்திரியாக பதவியேற்றார் எல்.முருகன்
மத்திய மந்திரியாக இன்று பதவியேற்றுள்ள எல்.முருகன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராக பதவி வகித்தவர்.
புதுடெல்லி:
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், 43 பேர் மந்திரிகளாக பதவியேற்றனர். தமிழகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய மந்திரியாக பதவியேற்றுள்ளார்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தியை அடுத்த கோனூரைச் சேர்ந்த எல்.முருகன், சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில், இளங்கலை பட்டத்தையும் அறிவுசார் சொத்துரிமை குறித்து பட்டயப் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலை சட்டப் பட்டமும் பெற்றுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் 15 ஆண்டுகள் வழக்கறிஞராக அனுபவம் கொண்டவர். மேலும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.
எல்.முருகன் தற்போது மத்திய மந்திரியாக பதவியேற்றதால், தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். நயினார் நாகேந்திரன் தலைவராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.