செய்திகள்
டாக்டர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் - பிரதமருக்கு கெஜ்ரிவால் கடிதம்
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் இந்தியாவில் தற்போது கணிசமாக குறைந்து வருகிறது.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கொரோனாவுக்கு எதிரான போரில் எண்ணற்ற டாக்டர்களும், நர்சுகளும் தங்கள் உயிரை இழந்துள்ளனர். அவர்களுக்கு பாரத ரத்னா விருது அளிப்பதுதான் அவர்களுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி.
மேலும், லட்சக்கணக்கான டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோர் தங்கள் உயிரையும், குடும்பத்தையும் பற்றி கவலைப்படாமல் மக்களுக்கு சேவையாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு நன்றியும், மரியாதையும் செலுத்த பாரத ரத்னா விருது அளிப்பதை தவிர வேறு சிறந்த வழிமுறை இல்லை.
தனிநபர் அல்லாமல் மொத்தமாக பாரத ரத்னா விருது அளிக்க விதிமுறை அனுமதிக்காவிட்டால், விதிமுறையை மாற்ற வேண்டும். டாக்டர்களுக்கு பாரத ரத்னா அளிக்கப்பட்டால், ஒவ்வொரு குடிமகனும் மகிழ்ச்சி அடைவான் என்றார்.