செய்திகள்
போலீசார் விசாரணை

காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்ம மரணம்- கணவரிடம் தீவிர விசாரணை

Published On 2021-06-23 06:53 GMT   |   Update On 2021-06-23 06:53 GMT
காதல் திருமணம் செய்த பெண் மர்மமாக இறந்திருப்பது வெங்கானூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவனந்தபுரம்:

திருவனந்தபுரம் அருகே உள்ள வெங்கானூர் பகுதியை சேர்ந்த அசோகன்- மோளி தம்பதியரின் மகள் அர்ச்சனா (வயது22). இவரும், விழிஞ்ஞம் அருகே உள்ள உச்சக்கடா பகுதியை சேர்ந்த சுரேஷ்(26) என்பவரும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

கணவர் வீடு உள்ள பகுதியில் வாடகை வீட்டில் கணவன்-மனைவி இருவரும் வசித்து வந்தனர். கட்டிட தொழிலாளியான சுரேசுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. மேலும் ரூ.3 லட்சம் பணம் கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அர்ச்சனாவை தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது.

இதனால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அர்ச்சனா தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அவரை சமாதானப்படுத்தி சுரேஷ் மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளார்.

இந்நிலையில் அர்ச்சனா அவரது கணவர் வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீயில் எரிந்த நிலையில் பிணமாக கிடப்பதாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அங்கு சென்று அர்ச்சனாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவலறிந்த விழிஞ்ஞம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அர்ச்சனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அர்ச்சனாசாவில் தங்களுக்கு சந்தேகம் உள்ளதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

அவரது சாவில் மர்மம் உள்ளதாக அர்ச்சனாவின் தந்தை அசோகன் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அர்ச்சனாவின் கணவர் சுரேசை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அர்ச்சனாவின் வீட்டில் ஒரு இடத்தில் டீசலுடன் ஒரு கேன் கிடந்தது. அதுகுறித்து சுரேசிடம் போலீசார் விசாரித்தபோது, தங்களின் வீட்டில் எறும்பு தொல்லை இருப்பதாகவும், அதற்காக டீசல் வைத்திருந்ததாகவும் தெரிவித்தார்.

சில வி‌ஷயங்களில் சுரேசின் பதில் போலீசாருக்கு திருப்தியாக இல்லை. இதனால் அவரிடம் போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்த பெண் மர்மமாக இறந்திருப்பது வெங்கானூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News