செய்திகள்
சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன்

கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ் இடைவெளி சர்ச்சை- மத்திய மந்திரி விளக்கம்

Published On 2021-06-16 10:21 GMT   |   Update On 2021-06-16 13:28 GMT
தடுப்பூசி போன்ற முக்கியமான பிரச்சினையை அரசியல்மயமாக்குவது துரதிர்ஷ்டவசமானது என்று சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோசுக்கும் இரண்டாம் டோசுக்கும் உள்ள இடைவெளியை 6-8 வாரங்களில் இருந்து 12 வாரம் முதல் 16 வாரங்கள் வரை நீட்டிக்கலாம் என நிபுணர் குழு பரிந்துரைத்தது. இரண்டாவது டோஸ் 12-16 வாரங்களுக்குள் வழங்கப்பட்டால் கூடுதல் பலன் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசிக்கான நெறிமுறை மாற்றப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், கோவிஷீல்டு தடுப்பூசியின் இடைவெளியை குறைப்பது தான் பயனுள்ளதாக இருக்கும் என ஆய்வு முடிவுகள் கூறுவதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. இதனால் கோவிஷீல்டு முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களிடையே, 2-வது டோஸ் செலுத்துவது குறித்த குழப்பம் ஏற்பட்டது. 



ஆனால் கோவிஷீல்டு தடுப்பூசிக்கான இடைவெளி குறித்து பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை என மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்குமான இடைவெளியை அதிகரிப்பது தொடர்பான முடிவு அறிவியல்பூர்வமான ஆதாரத்தின் அடிப்படையில், வெளிப்படையான முறையில் எடுக்கப்பட்டது என்று தேசிய நோய்த் தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (என்டிஏஜிஐ) தலைவர் என்.கே.அரோரா விளக்கம் அளித்திருந்தார். மேலும், ஆலோசனைக் குழு உறுப்பினர்களிடையே இதில் கருத்து வேறுபாடு இல்லை என்றும் அவர் கூறி உள்ளார்.


இதுதொடர்பான அறிக்கையை, மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் தனது டுவிட்டரில் பகிர்ந்து, தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில்,  கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரிக்கும் முடிவை வெளிப்படையாகவும் அறிவியல்பூர்வ தரவுகளின் அடிப்படையிலும் எடுக்கப்பட்டதாக கூறி உள்ளார்.

தரவை மதிப்பீடு செய்வதற்கு இந்தியா வலுவான பொறிமுறையைக் கொண்டுள்ளது என்றும், இதுபோன்ற முக்கியமான பிரச்சினையை அரசியல்மயமாக்குவது துரதிர்ஷ்டவசமானது என்றும் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News