செய்திகள்
சோனியா காந்தி

கல்வான் பள்ளத்தாக்கு மோதல் குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் - சோனியா காந்தி

Published On 2021-06-15 22:52 GMT   |   Update On 2021-06-15 22:52 GMT
கல்வான் பள்ளத்தாக்கு மோதலின் முதல் ஆண்டு நிறைவில், அங்கு உயிர் நீத்த வீரர்களுக்கு ராணுவ வீரர்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர்.
புதுடெல்லி:

கிழக்கு லடாக்கில், கடந்த ஆண்டு மே மாதம் சீன ராணுவ வீரர்கள் இந்திய பகுதிக்குள் ஊடுருவினர். அங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15-ம் தேதிக்கும் 16-ம் தேதிக்கும் இடையிலான நள்ளிரவு நேரத்தில் இந்திய-சீன ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய வீரர்கள் 20 பேர் பலியானார்கள்.

இச்சம்பவம் நடந்து நேற்று ஓராண்டு நிறைவடைந்தது. இதையொட்டி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:



கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடனான மோதலில் பலியான 20 இந்திய வீரர்களுக்கு தேசத்துடன் இணைந்து அஞ்சலி செலுத்துகிறேன். எல்லையில் நடந்த சீன அத்துமீறல் குறித்து இன்னும் தெளிவு வரவில்லை. மத்திய அரசு இதை தெளிவுபடுத்தும் என்றும், மோதலுக்கான சூழ்நிலையை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கும் என்றும், வீரர்களின் தியாகம் வீண்போகாது என்று உறுதி அளிக்கும் என்றும் ஓராண்டாக காங்கிரஸ் கட்சி பொறுமையாக காத்திருந்தது.


ஆனால், மத்திய அரசு இன்னும் தெளிவுபடுத்தவில்லை. எந்த ஊடுருவலும் நடக்கவில்லை என்று பிரதமர் கடைசியாக கூறினார். அவரது வார்த்தை அடிப்படையில், மோதல் தொடர்பான விவரங்களையும், எல்லையில் முந்தைய நிலைமையை நிலைநிறுத்த எடுத்த நடவடிக்கைகளின் முன்னேற்றத்தையும் தொடர்ந்து கேட்டு வருகிறோம்.

எனவே, இந்த விவகாரத்தில் மக்களுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டும். சீனாவுடன் செய்து கொண்ட படைவிலக்கல் ஒப்பந்தம், இதுவரை முற்றிலும் இந்தியாவுக்கு பாதகமாகவே செயல்படுத்தப்பட்டு வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News