செய்திகள்
தேர்தலுக்கு பிந்தைய வன்முறை: மவுனம் காக்கும் மம்தா என கவர்னர் விமர்சனம்
மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல் முடிவடைந்த உடன் நடைபெற்ற மிகப்பெரிய கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. தேர்தலுக்கு முன்பும், தேர்தல் நடைபெற்ற போதும் பா.ஜனதா தேர்தல் ஆணையம் துணையுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது.
இதனால் தேர்தல் முடிவடைந்த பின்னர் பல்வேறு இடங்களில் கலவரம் வெடித்தது. இந்த கலவரம் குறித்து மத்திய அரசு அறிக்கை கேட்டிருந்தது. கவர்னர் கலவரம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
நேற்று எதிர்க்கட்சி தலைவர் சுவெந்து அதிகாரி, பா.ஜனதா எம்எல்ஏ-க்களுடன் ஒன்றாக இணைந்து ஆளுநரை சந்தித்து, மாநிலத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து விளக்கம் அளித்தனர்.
இந்த நிலையில் மேற்கு வங்காள முதல்வர் தேர்தலுக்கு பின் நடைபெற்ற கலவரம் குறித்து மவுனமாக இருக்கிறார். மறுசீரமைப்பிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை என விமர்சனம் செய்துள்ளார்.
ஆளுநர் ஜெக்தீப் தன்கார் நான்கு நாள் பயணமாக டெல்லி செல்ல இருக்கிறார். அதற்கு முன் இதுகுறித்து மம்தாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் ‘‘தேர்தலுக்கு பின் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள், மனித உரிமைக்கு எதிரான வன்முறை, பெண்களின் கண்ணியத்திற்கு எதிரான தாக்குதல், பொதுச்சொத்தை சேதப்படுத்துதல், அரசியல் எதிரிகள் மீது சொல்லப்படாத துன்பங்கள் சுதந்திர இந்தியாவில் இதுவரை இல்லாதது.
உங்கள் மவுனம், மறுசீரமைப்பு, இழப்பீடு வழங்காதது இவை அனைத்தும் மாநிலத்தால் இயக்கப்படுகின்றன என்ற தவிர்க்க முடியாத நிலைக்கு கட்டாயப்படுத்துகின்றன’’ எனத் தெரிவித்துள்ளார்.