கேரளாவில் சாலையில் அமர்ந்து காங்கிரஸ் பெண் எம்.பி. திடீர் போராட்டம்
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் ஆலத்தூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக இருப்பவர் ரம்யா ஹரிதாஸ். கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட இவர் கேரள மாநிலத்தில் வெற்றி பெற்ற தலித் பெண் ஆவார்.
இந்த நிலையில் நேற்று ரம்யா ஹரிதாஸ் ஆலத்தூர் போலீஸ் நிலையம் பகுதியில் நடந்த ஒரு அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பினார். அப்போது ஆலத்தூர் பகுதியில் வந்தபோது, கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்களுக்கும் ரம்யா ஹரிதாசுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வாக்குவாதம் மூண்டது.
இதனால் அப்பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஆலத்தூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஆலத்தூர் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் நாசர், மற்றும் வார்டு உறுப்பினர் நஜிப் உள்பட சிலர் தன்னை தகாத வார்த்தைகள் பேசி மிரட்டினர்.
மேலும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே பொதுவாழ்க்கையில் ஈடுபட தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். இதையடுத்து நாசர் உள்பட 9 பேர் மீது பேலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலித் சமூகத்தை சேர்ந்த பெண் எம்.பி.யின் புகாரால் கேரள அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.