செய்திகள்
டெல்லியில் மூன்று மாதங்களுக்கு பின் மிகக் குறைந்த கொரோனா பாதிப்பு
கொரோனா மூன்றாவது அலையை போர்க்கால அடிப்படையில் சமாளிக்க அரசாங்கம் தயாராகி வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது மருத்துவமனைகள் நிரம்பி படுக்கைகள் கிடைக்காத நிலை இருந்தது. ஏப்ரல் மாதத்தில் இருந்து ஊரடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையடுத்து, பாதிப்பு படிப்படியாக குறைந்தது. இதனால் கடந்த திங்கட்கிழமை முதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், டெல்லியில் கொரோனா பாதிப்பு குறித்த தகவலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 213 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மூன்று மாதங்களுக்குப் பின் மிக குறைவான தினசரி பாதிப்பாகும். மே 1ம் தேதி டெல்லியில் மிக குறைவான அளவாக 175 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
கொரோனா பாதிப்பு விகிதம் 0.30 சதவீதமாக உள்ளது. பிப்ரவரி 23ம் தேதி பாதிப்பு விகிதம் 0.25 சதவீதமாக இருந்தது. அதன்பின்னர் இப்போதுதான் பாதிப்பு விகிதம் மிக குறைவாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 28 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மொத்த உயிரிழப்பு 24,800 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 497 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 3610 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா வைரசின் மூன்றாவது அலைக்கான வாய்ப்புகள் உண்மைதான் என்றும், அதை போர்க்கால அடிப்படையில் சமாளிக்க அரசு தயாராகி வருவதாகவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.