பாதுகாப்பு துறையின் எச்.ஏ.எல். நிறுவன ஊழியர்கள் 100 பேர் கொரோனாவுக்கு பலி
பெங்களூர்:
மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனம் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடேட் (எச்.ஏ.எல்.).
பெங்களூரில் செயல்பட்டு வரும் எச்.ஏ.எல். நிறுவனத்தில் ஹெலிகாப்டர், விமான உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் எச்.ஏ.எல். நிறுவனத்தில் ஏராளமான ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கொரோனாவுக்கு 100 ஊழியர்கள் பலியாகி இருக்கிறார்கள். 4 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊழியர்கள் கொரோனாவில் பாதிக்கப்பட்டதால் எச்.ஏ.எல். நிறுவனத்தில் முக்கிய பாதுகாப்பு திட்டப்பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
லைட்காம்பாட் விமானம் தேஜாஸ் மற்றும் லைட் காம்பாட் ஹெலிகாப்டர் போன்ற திட்டங்களில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
2021-22 ஆண்டு முதல் காலாண்டின் முதல் இரண்டு மாதங்களில் தொற்று நோயால் ஏற்பட்ட இடையூறு காரணமாக விற்பனை மூலம் ரூ.1,200 கோடி வருவாய்க்கான திட்டமிட்டப்படி தயாரிப்புகளை வழங்க முடியவில்லை.
இதுகுறித்து எச்.ஏ.எல். தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆர்.மாதவன் கூறியதாவது:-
எங்கள் நிறுவன ஊழியர்கள் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நிறுவனத்தில் வினியோகம் தொடங்கியவுடன் விற்பனை மீட்கப்படும்.
கூடுதல் முயற்சி செய்து பணிகளை மீட்டெடுக்க வேண்டும். ஆனால் லைட் காம்பாட் விமானத்தின் நீண்ட கால திட்ட செயல் திறன் பாதிக்கப்படாது. ஏனென்றால் அதன் காலக்கெடுவுக்கு போதுமான நேரம் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.