செய்திகள்
பிரதமர் மோடி

கான்பூர் சாலை விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி - பிரதமர் மோடி அறிவிப்பு

Published On 2021-06-08 21:01 GMT   |   Update On 2021-06-08 21:01 GMT
உத்தர பிரதேசத்தின் கான்பூரில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் இருந்து டெல்லி நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. கான்பூர் நகரில் சச்சேண்டி பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து, ஆட்டோ ஒன்றுடன் மோதி விபத்திற்கு உள்ளானது.

இந்த விபத்தில் 17 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும்  4 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து போலீசார் சம்பவ இடம் சென்று காயங்களுடன் போராடியவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கான்பூர் சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளதுடன், தலா ரூ.2 லட்சம் இழப்பீடும் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், கான்பூரில் நடந்த சாலை விபத்து சோகத்திற்கு உரியது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.  காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து நலமடைய வேண்டி கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



கான்பூர் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். காயம் அடைந்தோருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

இதேபோல், கான்பூர் சாலை விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு உள்துறை மந்திரி அமித் ஷாவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News