செய்திகள்
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி -பிரதமர் அறிவிப்பு
இலவச தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பாதவர்கள் தனியார் மருத்துவமனையில் பணம் கொடுத்து போட்டுக்கொள்ளலாம் என பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
இந்தியாவில் தற்போது 23 கோடிக்கும் மேலானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வரும் நாட்களில் தடுப்பூசி அதிக அளவில் வழங்கப்படும். நாட்டில் 7 நிறுவனங்களில் பல்வேறு தடுப்பூசிகள் தயாரிக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இதில், 3 தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன.
இனி அனைத்து தடுப்பூசிகளும் மத்திய அரசால் வாங்கப்பட்டு மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். மாநிலங்கள் மேற்கொள்ளும் 25 சதவீத தடுப்பூசி பணிகள் மத்திய அரசால் கையாளப்படும்.
வரும் இரண்டு வாரங்களில் புதிய வழிகாட்டுதல்களின்படி மத்திய அரசும் மாநில அரசுகளும் செயல்பட வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் வரும் 21ம் தேதி முதல் இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்படும். இலவச தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பாதவர்கள் தனியார் மருத்துவமனையில் பணம் கொடுத்து போட்டுக்கொள்ளலாம். தனியார் மருத்துவமனைகள், தடுப்பூசி போடுவதற்கான சேவைக் கட்டணமாக 150 ரூபாய் மட்டுமே வாங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.