செய்திகள்
கோப்புப் படம்

மொரீசியஸ் முன்னாள் அதிபர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் - ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு

Published On 2021-06-04 17:52 GMT   |   Update On 2021-06-04 17:52 GMT
மொரீசியஸ் நாட்டு முன்னாள் அதிபர் சர் அனிரூத் ஜக்நாத் மறைவுக்கு இந்தியா முழுவதும் நாளை ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்பட உள்ளது.
புதுடெல்லி:

மொரீசியஸ் நாட்டின் முன்னாள் அதிபர் சர் அனிரூத் ஜக்நாத். மொரீசியஸ் பிரதமராக பதவி வகித்து வரும் பிரவீந்த் ஜக்நாத்தின் தந்தையான அனிரூத் முன்னாள் பிரதமராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில், அவர் நேற்று காலமானார். அவருக்கு வயது 91.

இதனை தொடர்ந்து பிரதமர்-மோடி, மொரீசியஸ் பிரதமருடன் தொலைபேசி வழியே இன்று தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மொரீசியஸ் நாட்டின் மூத்த தலைவரான அனிரூத் மறைவை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாளை நாடு முழுவதும் ஒரு நாள் துக்கம் அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்திய தேசிய கொடி நாளை ஒரு நாள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். இதேபோல், அரசு சார்பிலான கொண்டாட்ட நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News