செய்திகள்
90 நாட்களுக்கு இலவச இண்டர்நெட் - இதை நம்பாதீங்க
இந்திய டெலிகாம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவச இண்டர்நெட் வழங்குவதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வி போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் மூன்று மாதங்களுக்கு இலவச இண்டர்நெட் வழங்குவதாக கூறும் தகவல் வாட்ஸ்அப் செயலியில் வலம்வருகிறது. குழந்தைகளின் ஆன்லைன் கல்விக்காக மத்திய அரசு இந்த சலுகையை வழங்க உத்தரவிட்டு இருப்பதாக வைரல் குறுந்தகவலில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
வைரல் குறுந்தகவலில் இணைய முகவரி ஒன்றும் இடம்பெற்று இருக்கிறது. இந்த இணைய முகவரியை க்ளிக் செய்யும் பட்சத்தில் பயனரின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பணத்தை இணைய விஷமிகள் பறித்துக் கொள்ள அதிக வாய்ப்புகள் உண்டு. விஷமிகள் பயனர் விவரங்களை திருட மேற்கொள்ளும் மிக எளிய வழிமுறைகளில் இதுவும் ஒன்று.
இதனால் பயனர்கள் அதிகாரப்பூர்வமற்ற வாட்ஸ்அப் குறுந்தகவல்களை எப்போதும் நம்ப கூடாது. இதுபோன்று வலம்வரும் குறுந்தகவல்களை படித்ததும், அழித்துவிட்டால் ஒவ்வொருத்தரின் தனியுரிமையை பாதுகாக்க முடியும். இதே தகவலில் உண்மையில்லை என மத்திய அரசின் பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ தெரிவித்து இருக்கிறது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.