செய்திகள்
லட்சுமண் சவதி

கர்நாடகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து எடியூரப்பா விரைவில் முடிவு செய்வார்: லட்சுமண் சவதி

Published On 2021-06-02 03:39 GMT   |   Update On 2021-06-02 03:39 GMT
ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா பரவல் குறைந்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. அதே நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
பெங்களூரு :

பெங்களூரு சாந்திநகரில் உள்ள கே.எஸ்.ஆர்.டி.சி. அலுவலக வளாகத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கும் முகாம் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி கலந்து கொண்டு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் உள்ள 4 போக்குவரத்து கழகங்களில் 1.31 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இதில் இதுவரை 19 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகே பஸ்களில் பணியாற்ற உள்ள ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படுகிறது. இதனால் பயணிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.

அனைத்து ஊழியர்களும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். ஊரடங்கை நீட்டிப்பது குறித்து நிபுணர் குழு அறிக்கை வழங்கியுள்ளது. ஊரடங்கை எத்தனை நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்பது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா விரைவில் முடிவு செய்வார். அரசு பஸ்கள் எப்போது இயக்கப்படும் என்பது தெரியவில்லை.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா பரவல் குறைந்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. அதே நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு லட்சுமண் சவதி கூறினார்.

Tags:    

Similar News