செய்திகள்
கோப்புப்படம்

‘2-டிஜி’ மருந்தை கர்ப்பிணிகளுக்கு தரக்கூடாது - வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியீடு

Published On 2021-06-01 20:27 GMT   |   Update On 2021-06-01 20:27 GMT
கொரோனா சிகிச்சைக்கான 2-டிஜி என்ற மருந்தை அவசர பயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் தனது ஒப்புதலை வழங்கி உள்ளது.
புதுடெல்லி:

கொரோனா சிகிச்சைக்கான 2-டிஜி என்ற பவுடர் மருந்தினை கர்ப்பிணிகளுக்கு தரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து நிவாரணம் அளிப்பதற்காக டி.ஆர்.டி.ஓ. என்னும் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஆய்வுக்கூடமான அணு மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் நிறுவனம் (ஐ.என்.எம்.ஏ.எஸ்.), ஐதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் நிறுவனத்துடன் இணைந்து பவுடர் வடிவிலான ஒரு மருந்தை கண்டுபிடித்துள்ளது.

2-டிஜி என்ற இந்த மருந்தின் அவசர பயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் தனது ஒப்புதலை வழங்கி உள்ளது. அதையடுத்து கடந்த 17-ந் தேதி இந்த மருந்தை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் வெளியிட, மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் பெற்றுக்கொண்டார்.



இந்த மருந்தை பயன்படுத்துவதற்கான வழிகாட்டும் நெறிமுறைகளை பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்:-

* மிதமான மற்றும் தீவிரமான கொரோனா நோயாளிகளுக்கு இந்தமருந்தை அதிகபட்சம் 10 நாட்கள் வரை டாக்டர்கள் பரிந்துரைக்க வேண்டும்.

* கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு, இதய நோய், சுவாச பிரச்சினை, கல்லீரல், சிறுநீரக கோளாறு உடையவர்களுக்கு இந்த மருந்தை தந்து பரிசோதிக்கவில்லை. எனவே இவர்களுக்கு இந்த மருந்தை பரிந்துரைக்கிறபோது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

* கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், 18 வயதுக்குட்பட்ட நோயாளிகளுக்கும் இந்த மருந்தை தரக்கூடாது.

* மருந்தைப் பெற சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரி நிர்வாகம், ஐதராபாத் டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீசை அணுக வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News